தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரன்.. ஆனா கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே.. இது டிரில்லியன் டாலர் கதை!
கிரப்டோகரன்சி செயலியில் முதலீடு செய்தவருக்கு பல கோடி ரூபாய் விழுந்து, கடைசியில் அது தவறு என தெரியவந்த சம்பவம் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நிகழ்ந்துள்ளது.
ஜார்ஜியா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை என்பார்களே.. நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் ஜார்ஜியாவில் நடந்துள்ளது. சர்வர் பிரச்சினையால் டிரில்லியன் கணக்கில் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேர, சில மணி நேரம் மட்டும் ஒருவர் கோடீஸ்வரராக வாழ்ந்துள்ளார்.
அதிர்ஷ்டம் இருந்தால் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் என எதிர்பார்ப்பவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். கவலையோடு படுத்துத் தூங்கி காலையில் எழும் போது, பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, பணக்காரராகி விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும்தான் இருக்கிறது. ஆனால் விக்ரமன் பட ஹீரோக்களைத் தவிர எல்லோருக்கும் அப்படியான அதிர்ஷ்டம் அடித்து விடுவதில்லை.
சிலருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலேயே சென்று விடுகிறது. ஜார்ஜியாவில் நடந்த கதையும் அப்படிப்பட்டதுதான்.
கிரிப்டோக்ரன்சி
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் வில்லியம்சன். இவர் மெய்நிகர் கரன்சி என அழைக்கப்படும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் உடையவர். ராக்கெட் பன்னியில் அவர் சுமார் இருபது டாலர்களை முதலீடு செய்திருந்தார்.
இன்ப அதிர்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் அதிகாலையில் தூங்கி எழுந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் டிரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாக செல்போனில் செய்தி இருந்தது கண்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார். படுக்கையில் இருந்து துள்ளி எழுந்த கிறிஸ்டோபர், தனது நண்பர்களுக்கு போன் செய்து இந்த விசயத்தைச் சொல்லியுள்ளார். பின்னர், இவ்வளவு பணத்தையும் எதில் எதில் எல்லாம் முதலீடு செய்யலாம், என்னவெல்லாம் வாங்கலாம் என திட்டமிடத் தொடங்கி இருக்கிறார்.
விசாரணை
ஆனால், கிறிஸ்டோபரின் இந்த சந்தோசம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. தனது ஒரு வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்ற முயற்சித்துள்ளார் அவர். அப்போது, அந்தப் பணத்தை அவரது கணக்கு காட்டவில்லை. இதனால் குழப்பமடைந்த கிறிஸ்டோபர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தை போனில் அழைத்து விசாரித்துள்ளார்.
சர்வர் பிரச்சினை
அப்போது தான், சர்வரில் ஏற்பட்ட பிரச்சினையால் தவறுதலாக அப்படி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டதாக அவர்கள் கிறிஸ்டோபரிடம் கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்டு கிறிஸ்டோபர் உடைந்து போய் விட்டார். ஆனாலும் இதனை ஜாலியாகவே எடுத்துக் கொண்டுள்ளார் அவர். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பெருந்தொகை இது. நிச்சயம் இவ்வளவு பணம் உண்மையில் கிடைத்தால், என் வாழ்க்கையே மாறி விடும்' எனப் பதிவிட்டுள்ளார்.