ஆப்கன் கல்லூரிகளில் பெண்களுக்கு தடை.. 'லைவ்' நிகழ்ச்சியில்.. சான்றிதழ்களை கிழித்தெறிந்த பேராசிரியர்
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து தனது கல்வி சான்றிதழ்களை பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆப்கானிஸ்தானில் போராட்டம் வெடித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களின் கொந்தளிப்பை பிரதிபலிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது.
எனினும், இந்தப் போராட்டங்களால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத தாலிபான்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆயுதம் ஏந்திய படைகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

பெண் உரிமையை நசுக்கும் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் திரும்பிய பிறகு, தாலிபான்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தனர். ஆட்சிக்கு வந்ததுமே தாலிபான்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கினர். முதலில், பெண்கள் கட்டாயம் பர்தா அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவை தாலிபான் அரசு பிறப்பித்தது. பின்னர், பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த வாரம் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வி செல்லும் பெண்கள் உடனடியாக தங்கள் படிப்பை கைவிட வேண்டும் என்றும், இனி பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தடைவிதிக்கப்படுகிறது எனவும் அரசு உத்தரவிட்டது.

வெடிக்கும் போராட்டம்
இந்த உத்தரவு ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, தாலிபான்களின் இந்த உத்தரவைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். பெண்கள் மீண்டும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் வரை நாங்கள் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

சான்றிதழ்களை கிழித்த பேராசிரியர்
இந்நிலையில், பெண்களுக்கு கல்லூரிகளில் தடைவிதிக்கப்பட்டது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சியில் நேரலை விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்ற காபூல் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் ஒருவர், "எனது சகோதரியும், தாயாரும் இந்த நாட்டில் படிக்க முடியாது என்ற சூழல் உருவாகிவிட்ட பிறகு, நான் இந்த கல்வியை ஏற்கப்போவதில்லை. கல்விக்கு இடமில்லாத இந்த நாட்டில் எனது சான்றிதழ்களை வைத்து என்ன செய்யப் போகிறேன்" எனக் கூறிக்கொண்டே, தனது சான்றிதழ்களை கிழித்தெறிந்தார்.

பின்வாங்காத தலிபான்கள்
பெண்கள் உயர்கல்வி பயில தடைவிதிக்கப்பட்டதை அடுத்து, ஆப்கானிஸ்தான் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்து வருகிறது. எனினும், இதுகுறித்து தாலிபான்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. மாணவர்கள் போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தாலிபான்களோ ஆயுதங்களை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் முன்பும் நிற்கிறார்கள். அங்கு பெண்கள் வருவதை தடுக்க இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை பார்க்கும் போது, இந்த விஷயத்தில் தாலிபான்கள் பின்வாங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications