'பலநூறு பெண்கள், குழந்தைகளை கடத்தி.. மனிதக்கேடயமாக்கும் தாலிபான்கள்..' பகீர் கிளப்பும் அம்ருல்லா சலே
காபூல்: பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரை கடத்தும் தாலிபான்கள், அவர்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தி வருவதாகத் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்தவொரு நாடும் எதிர்பார்க்காத வகையில், வெறும் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். கடந்த வாரம் காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் ஆட்சி அமைக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆப்கன் அதிபராக இருந்த அஸ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ஐக்கிய அமீரகத்தில் இப்போது தஞ்சம் புகுந்துள்ளார்.

அம்ருல்லா சலே
ஆப்கன் சட்டப்படி அதிபர் நாட்டில் இல்லாத போது, துணை அதிபர் தான் அதிபராகச் செயல்பட முடியும் என்று கூறி தன்னை தானே அதிபராக அறிவித்துக் கொண்டவர் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே. தாலிபான்களைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் இவர், மனித கேடயமாகப் பயன்படுத்தப் பெண்களைத் தாலிபான்கள் கடத்தி வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்,

மனிதக்கேடயமாக பெண்கள், குழந்தைகள்
இது குறித்து அம்ருல்லா சலே தனது ட்விட்டர் பக்கத்தில், "தாலிபான்கள் அந்தராப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு உணவு மற்றும் எரிபொருளை அனுமதிக்கவில்லை. இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. இப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான பெண்கள் & குழந்தைகள் மலைகளுக்கும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கும் தப்பிச் சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகக் குழந்தைகள் & முதியவர்களைக் கடத்தும் தாலிபான்கள் ஒவ்வொரு வீடுகளையும் சோதனை செய்யும்போது, அவர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

பஞ்ச்சிர் பள்ளத்தாக்கு
ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள போதிலும் பஞ்ச்சிர் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை. தாலிபான்களுக்கு எதிராகப் போராளி குழுக்களை அகமது மசூது என்பவர் நடத்தி வருகிறார். அம்ருல்லா சலே இப்போது பஞ்ச்சிர் மாகாணத்தில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பஞ்ச்சிர் மாகாணத்தின் ஒரு பகுதியைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாகத் தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள அம்ருல்லா சலே, பஞ்ச்சிர் மாகாணம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்குத் தயார்
இது தொடர்பாக இந்திய டூடே செய்தி நிறுவனத்திற்கு அம்ருல்லா சலே அளித்த பேட்டியில், "பஞ்ச்சிர் மாகாணத்தில் நாங்கள் தான் கட்டுப்பாட்டில் உள்ளோம். தாலிபான்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளோம். பேச்சுவார்த்தை என்றால் சரணடைவது அல்லது தாலிபான் சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்வது என்று அர்த்தமல்ல. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையாக அது அமைய வேண்டும் . பேச்சுவார்த்தைக்குத் தாலிபான்கள் உடன்படவில்லை என்றால் அவர்களுடன் சண்டையிடவும் தாயாராக உள்ளோம்" என்றார்.

தாலிபான் ஆட்சி
இதற்கு முன் 1996 - 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த காலத்தில் பெண் உரிமை மோசமாக மறுக்கப்பட்டது. ஆனால், இந்த முறைப் பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும் என்று தாலிபான்கள் தொடர்ந்து கூறினர். இருப்பினும், ஆட்சி அமைத்தது முதல் ஆண் - பெண் இருபாலர் படிக்கும் கல்வி முறைக்குத் தடை என அவர்கள் எடுக்கும் நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்புகளையே ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications