‘ஆல் ரைட், குட் நைட்' மாயமான மலேசிய விமான பைலெட்டின் கடைசி தகவல்
கோலாலம்பூர்: மாயமான மலேசியா விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டுக்கு அறையுடன் தொடர்பில் இருந்த பைலெட் இறுதியாக 'ஆல் ரைட், குட் நைட்' என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் மாயமானது
விமானத்தில் பயணம் செய்த 5இந்தியர்கள் உள்பட 239 பேரின் கதி என்ன ஆனது என்பது புரியாத புதிராக உள்ளது. விமானம் காணாமல் போய் 5 நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானத்தை தேடும் பணியில் சீனா, அமெரிக்கா மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
நேற்றைய தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது.
இந்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை, விமான தேடல் குழு, மீட்பு குழு ஆராய்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதி வரையில் விமானத்தை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டது.
இந்நிலையில் மாயமான விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டுக்கு அறையுடன் தொடர்பில் இருந்த பைலெட் இறுதியாக 'ஆல் ரைட், குட் நைட்' என்று கூறியுள்ளார். விமானம் ரேடார் தொடர்பை இழந்ததற்கு முன்னர் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல் இது தான் என்று கோலால்பூர் விமான கட்டுபாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் படமும் வெளியிடப்பட்டுள்ளது.