அமெரிக்க உளவு அமைப்பை நாம் 'உளவு பார்க்கலாம்'- ட்விட்டர், பேஸ்புக்கில் இணைந்தது சிஐஏ
வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்துள்ளது. அமெரிக்காவில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் அமெரிக்க ராணுவ அமைப்பு சிஐஏ எனப்படும் மத்திய உளவு ஏஜென்சி. சிஐஏ கண்களுக்கு தப்பாமல் உலகின் எந்த மூலையிலும் பெரிய சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாது.
சமூக வலைத்தள தாக்கம்
இப்போது சிஐஏவும் சமூக வலைத்தளங்களில் புகுந்து பயனாளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய வலைத்தளங்களில் நேற்று முதல், சிஐஏ இணைந்துள்ளது.இணைந்த ஓரு நாளுக்குள், அதாவது இன்று காலை நிலவரப்படி 3 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர்.
கமலஹாசனும், சிஐஏவும்
"இதுதான் எங்கள் முதல் கீச்சு என்பதை நாங்கள் உறுதி செய்யவும் இல்லை, அதே நேரம் மறுக்கவும் இல்லை" என்பதுதான் சிஐஏவின் முதல் ட்விட். கமலஹாசன் பேசும் வசனம் போல சுற்றிவளைத்து ஒரு தகவலை செல்ல வரும் இந்த ட்விட்டை, அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் ரீட்விட் செய்துள்ளனர். 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் பேவரைட் செய்துள்ளனர்.
இரு கீச்சுக்கள்
ட்விட்டர் பயனாளிகளின் ஏகோபித்த வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ள சிஐஏ தனது இரண்டாவது ட்விட்டில், "ட்விட்டர் வரவேற்புக்கு நன்றி. சிறந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளது. இன்று நண்பகல் வரை இவ்விரு ட்விட்டுகளும்தான் சிஐஏவால் செய்யப்பட்டுள்ளது.
ரகசியம் கசியாது
ட்விட்டருக்குள் வந்தாலும், உளவு சார்ந்த விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்க மாட்டோம் என்று அமெரிக்க உளவு அமைப்பு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. சிஐஏயின் முதலாவது கீச்சு சிறப்பாக இருந்ததாக பாலோவர்கள் பலரும் கூறியுள்ள நிலையில், 'ஒரு ஜோக்குடன் தனது அக்கவுண்ட்டை ஆரம்பித்துள்ளது சிஐஏ' என்று பிபிசி கிண்டல் செய்துள்ளது.
பேஸ்புக்கிலும் வரவேற்பு
பேஸ்புக்கிலும் கால்பதித்த சிஐஏ ஒரே நாள் இரவுக்குள், 7,300 லைக்குகளை அள்ளியுள்ளது. "நாங்கள்தான் நாட்டின் முதல்தர பாதுகாப்பு அமைப்பு. பிறர் செய்து முடிக்காததை செய்து முடிப்போம், பிறர் போக முடியாத இடத்துக்கும் நாங்கள் போவோம்" என்று பேஸ்புக் பக்கத்தில் சிஐஏ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
மக்களிடம் தகவல் பெற வசதி
இதுகுறித்து சிஐஏ வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் "ஏற்கனவே வெப்சைட், செல்போன் சைட், பிளிக்கர், யூடியூப் ஆகியவற்றில் சிஐஏ கணக்கு வைத்துள்ளநிலையில், பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இணைந்துள்ளோம். இதன் மூலமாக மக்களிடமிருந்து நேரடியாக தகவல்களை சிஐஏ பெற முடியும். நாங்கள் யாருக்காக சேவையாற்றுகிறோமோ அந்த அமெரிக்க மக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்க இந்த வலைத்தளங்கள் உதவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் எதிர்ப்பு
இதனிடையே சமூக வலைத்தளங்களில் சிஐஏ இணைந்ததற்கு அமெரிக்காவில் சில ஊடகங்களும், பொதுமக்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அறிந்தோ அறியாமலோ நாட்டின் ரகசியங்கள் வெளியே செல்ல இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.