ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சான்பிரான்சிஸ்கோவில் தமிழர்கள் நடத்திய கண்டனப் போராட்டம்
சான்பிரான்சிஸ்கோ : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து கண்டனப் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் விவகாரம் தற்போது கடல்கடந்து, தேசங்கள் கடந்து விவாதிக்கப்படும் பிரச்னைகளில் ஒன்றாகியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். 50 நாட்களைக் கடந்தும் நீடித்து வரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களும் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி வட அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கும் தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.
அந்தபோராட்டத்தில் தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்திருந்த சில புலம்பெயர் தமிழர்கள் அந்த ஆலையால் அங்கு சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பது குறித்த தங்களது வேதனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், இது தூத்துக்குடி நகர மக்கள் பிரச்சினை என்று கருதாமல், இது தமிழ்நாட்டின் பிரச்சினை என்று கருதி ஒன்று கூடிய புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமை தங்களை மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாக்கியதாகவும், இந்த ஆலைக்காக அரசு மேற்கொண்ட அத்துமீறல்களும், அடக்குமுறைகளும் தங்களைப் போராடச் செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைகளில் இருந்து நச்சு வாயுக்கள் குறித்தும், அவை ஏற்படுத்தி வரும் நோய்கள் குறித்தும் விவரமாக எடுத்துரைக்கப்பட்டது. இறுதியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு தயார் செய்யப்பட்டு, போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, இந்திய தூதரக அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.