மூட்டைப் பூச்சிக்கு பயந்து... நிஜமாகவே வீட்டைக் கொளுத்திய நபர்- அமெரிக்காவில்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒருவர் மூட்டைப் பூச்சி தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் வீட்டைக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் ஜோகனான் லர்சோனா.
இவர் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். அவரது வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருந்தது. அதை கொன்று ஒழிக்க முடிவு செய்தார்.
ஆல்ஹகால் தெளிப்பு:
அதற்காக ஆல்கஹாலை வீடு முழுவதும் அடித்தார். அப்போது அவரது கண்ணில் ஒரு மூட்டை பூச்சி தென்பட்டது. அதை கொல்ல சிகரெட் லைட்டரை பற்ற வைத்து அதன் மீது வைத்து பொசுக்கினார்.
வீடு பத்திகிச்சு:
இதற்கிடையே அவர் ஆல்கஹால் அடித்து இருந்ததால் லைட்டரில் இருந்து வெளியான தீ வீடு முழுவதும் பிடித்தது. பின்னர் பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. 4 வீடுகளில் தீ பிடித்து பொருட்கள் சேதமடைந்தன.
மருத்துவமனையில் சிகிச்சை:
இந்த தீ விபத்தில் மூட்டை பூச்சியை கொல்ல வீட்டை கொளுத்திய லர்சோனா உடல் முழுவதும் தீயில் கருகியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5வது இடத்தில் பிலா டெல்பியா:
அமெரிக்காவில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் உள்ள நகரமாக பெரிய நகரங்களில் ஒன்றாக டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலா டெல்பியா 5 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.