அடுக்கடுக்காய் காவு வாங்கும் “ஆஷ்லே மேடிசன்” - ஹேக்கர்களால் அம்பலமான கள்ளக் காதலர்கள்!
டோராண்டோ: கள்ளக் காதலுக்காகவே பிரபலமான இணையதளமான ஆஷ்லே மேடிசன் முடக்கப்பட்டு ரகசிய தொடர்புகள் அம்பலமானதால் பலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Life is short... Have an affair என்பதையே கொள்கையாகக் கொண்டு கள்ளக்காதலர்களுக்கு தரகு வேலை பார்த்துவந்த பிரபல இணையதளம் ஆஷ்லே மேடிசன்.
இந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். இவர்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தது ஆஷ்லே மேடிசன்.
எங்கள் சேவை உங்களுக்குத் தேவை:
உள்ளூரில் கணவன் இல்லாத போது, உள்ளூர்வாசியுடன், வெளிநாட்டு பயணத்தின் போது மனைவி உடன் வராத போது அந்த நாட்டை சேர்ந்த புத்தம்புது சிட்டுடன் என அனைத்து வகையான சேவைக்கும் இந்த இணையதளம் வழியமைத்து தருவதால் தமது கள்ளத்தொடர்புகள் எல்லாம் ரகசியமாகவே நடந்து வருவதாக இந்த அங்கத்தினர் கருதி வந்தனர்.
வெளிய தெரியவே தெரியாது:
இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த "ஆஷ்லே மேடிஸன்" உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று வாக்குறுதி வேறு அளித்திருந்தது.
மிரட்டல் விடுக்கும் ஹேக்கர்ஸ்:
கடந்த மாதம் இந்த இணையதளத்துக்குள் ஊடுருவிய சில "ஹேக்கர்ஸ்"மேற்கண்ட மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர்? இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சுரண்டல் செய்து விட்டது. இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் "ஆஷ்லே மேடிஸன்" நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்தது.
புளியைக் கரைத்த செய்தி:
இதையடுத்து, 32 கோடி வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர் உட்பட திருடிய அனைத்து விவரங்களையும் அந்த ஹேக்கர்கள், இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளதாக பிரபல தொழில்நுட்ப வார இதழான வொயர்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி "ஆஷ்லே மேடிஸன்" அங்கத்தினரான ஆண், பெண் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியது.
தற்கொலை செய்து கொண்ட இருவர்:
இந்நிலையில், சமீபத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கும், ஆஷ்லே மேடிஸன் கள்ளத்தொடர்பு விவரங்கள் இன்டர்நெட்டில் அம்பலமானதற்கும் தொடர்பு இருப்பதாக டொரண்டோ போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
எத்தனையோ பேர் வாழ்க்கை ஊசல்:
இந்நிலையில் ஆஷ்லே மேடிஸன் சம்பவம் பல குடும்பங்களை காவு வாங்கக் காத்திருப்பதாக பல சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.