ஆஸ்திரேலியா டாலர் நோட்டில்.. இனி எலிசபெத் படம் இடம்பெறாது.. பரபர அறிவிப்பு! இதுதான் காரணம்!
ஆஸ்திரேலியா சுதந்திர நாடாக இருந்தாலும், தங்கள் நாட்டின் தலைவராக பிரிட்டன் அரசரை ஏற்றுக்கொள்வதாக 1999ம் ஆண்டு ஒப்புக்கொண்டன.
கான்பெரா: தங்கள் நாட்டின் 5 டாலர் நோட்டில் இடம்பெற்றிருந்த பிரிட்டனின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படத்தை நீக்க உள்ளதாக ஆஸ்திரேலியா அரசு கூறியிருக்கிறது.
ஆஸ்திரேலியா உட்பட 14 காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இருந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த 14 காமன்வெல்த் நாடுகள் சுதந்திரம் பெற்றிருந்தாலும் தங்கள் நாட்டின் மாட்சிமை பொருந்திய தலைவியாக பிரிட்டனின் மகாராணியை கருதி வந்தன. இந்நிலையில் இந்த உயிரிழப்பையடுத்து தற்போது ஆஸ்திரேலியா தங்கள் நாட்டின் 5 டாலர் நோட்டில் இடம்பெற்றிருந்த பிரிட்டனின் மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படத்தை நீக்க உள்ளதாக அறிவித்திருக்கிறது.
இது குறித்து அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கூறுகையில், "மாற்றத்தை ஆதரிக்கும் கூட்டாட்சி அரசாங்கத்துடனான ஆலோசனையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த 5 டாலர் நோட்டின் ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் படம் இடம்பெற்றிருக்கும். மறுபுறம் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் இடம் பெறும்" என்று கூறியுள்ளது. இந்த மாற்றத்தை அந்நாட்டு மக்கள் பலர் வரவேற்றுள்ளனர்.
இதற்கு முன்னர்
இது போன்று மாற்றம் செய்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தில் இதேபோன்று ஒரு மாற்றத்தை செய்து. அதாவது இந்நாட்டில் சுமார் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மக்கள் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவதாக ஆய்வார்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்நாட்டின் தேசிய கீதத்தில் இளமையான மற்றும் சுதந்திரமான நாடு ('Young and Free') என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பழங்குடியின மக்களின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் புறக்கணிக்கும் வகையில் இந்த வரிகள் இருப்பதாக நீண்ட நாட்களாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பிரிட்டன்
இம்மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியாகதான் 18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவுக்குள் பிரிட்டன் நுழைந்தது. ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை பிரிட்டன் தனது காலனி நாடாக வைத்திருந்தது. இதனையடுத்து கடந்த 1901ம் ஆண்டு இந்நாடு பிரிட்டனிலிருந்து விடுதலையடைந்தது. ஆனாலும் 1986ம் ஆண்டுதான் ஆஸ்திரேலியாவுக்கு என தனி சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், இந்த 'இளமையான நாடு' என்கிற வரியை அந்நாட்டு மக்கள் ஏற்கவில்லை. இந்த வரிகள் நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் 2021ம் ஆண்டு இந்த வரிகள் நீக்கப்பட்டது.
தேசிய கீதத்தில் மாற்றம்
அதற்கு பதில், 'நாங்கள் ஒற்றுமையாக சுதந்திரத்துடன் உள்ளோம்' எனும் வரி சேர்க்கப்பட்து. இதன் மூலம் காலம் காலமாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்துள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியிருந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாகவே இந்த டாலர் நோட்டின் படமும் மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1999ம் ஆண்டு பிரிட்டன் அரசால் ஒரு வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் நோக்கம் பிரிட்டன் தலைவரை அதன் அரச தலைவராக தேர்ந்தெடுத்துக்கொள்வதா வேண்டாமா? என்பதுதான்.
ஆலோசனை
இந்த வாக்கெடுப்பில் பாதிக்கும் சற்று அதிகமான மக்கள் பிரிட்டன் அரசரை தங்கள் நாட்டின் அரசராக தேர்ந்தெடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. தற்போது இந்நாட்டின் புதிய 5 டாலர் நோட்டில் பழங்குடியினரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்க எந்த படத்தை சேர்ப்பது என்பது குறித்து அந்நாட்டின் பழங்குடியின தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.