இனப்படுகொலை.. வங்கதேச தலைவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்!
வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திரப்போராட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் அப்துல் காதர் முல்லா. இவருக்கு கடந்த ஆண்டு போர்க்குற்ற தீர்ப்பாயம், ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையாக மாற்றியது. இந்த தூக்கு தண்டனை நேற்று முன் தினம் இரவு நிறைவேற்றப்பட இருந்தது. கடைசி நிமிடத்தில் அப்துல் காதர் முல்லாவை தூக்கில் போட நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடை மறுநாள் காலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. காலை அப்துல் காதர் முல்லா தரப்பு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெறும் என தலைமை நீதிபதி முஜாமல் உசேன் அறிவித்தார். அதன்படி விசாரணை நடைபெற்றது.
அப்போது அப்துல் காதர் முல்லாவின் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. அவரை தூக்கில் போடுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படவில்லை.