இஸ்ரேல் நெருக்கடியால் பிபிசி மத்திய கிழக்கு செய்தி ஆசிரியர் நீக்கம்?
லண்டன்: இஸ்ரேலின் கடும் நெருக்கடியால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிபிசியின் செய்தி ஆசிரியராக இருந்த ஜெரிமி போவென் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிபிசியின் செய்தி ஆசிரியராக இருந்த ஜெரிமி போவென் அரபு நாடுகளின் எழுச்சிகள் பற்றிய நூலை எழுதியவர். காஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூர யுத்தம் பற்றிய தகவல்களை தொடர்ந்து வழங்கியவர்.
தமது ட்விட்டர் பக்கத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தின் கோரக் காட்சிகளை உடனுக்குடன் வெளியிட்டு வந்தார். கடந்த மாதம் இஸ்ரேலால் சர்வதேச ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட போது ஜெரிமி போவென்னும் வெளியேறியவர்.
மனித கேடயங்கள் அல்ல
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ ஸ்டேட்ஸ்மேன் என்ற ஊடகத்துக்கு ஜெரிமி எழுதிய ஒரு கட்டுரைதான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கட்டுரையின் தலைப்பே "பாலஸ்தீனர்களை ஹமாஸ் இயக்கம் மனித கேடயங்களாக பயன்படுத்தியதற்கான எந்த ஒரு சாட்சியத்தையும் நான் பார்க்கவில்லை.. என்பதுதான்.
தீயாக பரவிய போட்டோ..
இந்த கருத்து அப்பட்டமான ஹமாஸ் ஆதரவு கருத்து என்று கூறி பிபிசி நிர்வாகத்துக்கு இஸ்ரேல் நெருக்கடி கொடுத்தததாகவும் அதனால் ஜெரிமி போவென் பிபிசி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் ட்விட்டரில் செய்திகள் வெளியாகின.
அதுவும் பிபிசி லோகோ மற்றும் ஜெரிமியின் புகைப்படத்துடன் கூடிய செய்தி 'போட்டோ வடிவில்' இணையத்தில் பரவ ஆரம்பித்தது. 12 மணி நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதை ட்வீட் செய்திருக்கின்றனர்.
பதிலே இல்லை
இதற்கு ஜெரிமி எந்த ஒரு பதில் பதிவும் போடவில்லை. கடந்த 22-ந் தேதி முதல் ஜெரிமியின் ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு பதிவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..
போலி ட்விட்டர் பக்கம்
அதே நேரத்தில் ஜெரிமி போவென் பெயரிலான போலி ட்விட்டர் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு தாம் விடுமுறையில் இருக்கிறேன் என்கிற பதிவும் ட்விட்டரில் பரவ விடப்பட்டது.
முட்டாள்தனமானது
இது குறித்து பிபிசி செய்த் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இஸ்ரேலின் நெருக்கடியால் ஜெரிமி போவென் நீக்கப்பட்டிருப்பதாக கூறுவது முட்டாள்தனமானது. சிரியா, ஈராக், இஸ்ரேலைத் தொடர்ந்து காஸாவில் இருந்தும் அவர் செய்திகளை கொடுத்துக் கொண்டிருந்தார். தற்போது அவர் விடுப்பில் இருக்கிறார். மிக விரைவில் மத்திய கிழக்கு நாடுகளின் செய்திப் பணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.
இதே கருத்தையே பிபிசியின் மற்றொரு மூத்த மத்திய கிழக்கு செய்தியாளர் ஜோனாதன் முன்ரோவும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிபிசி விளக்கம்
இந்த விவகாரங்களில் ஆடிப் போன பிபிசி நிர்வாகம் தமது இணையத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அதிலும் ட்விட்டரில் இப்படியெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது... விரைவில் ஜெரிமி பணிக்கு திரும்புவார் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.