ஒரே தாதியிடம் பால் குடித்ததால்... 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியைப் பிரித்தது சவுதி கோர்ட்
ரியாத்: குழந்தைகளாக இருந்த போது ஒரே தாயிடம் பால் குடித்ததற்காக, சுமார் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியைப் பிரிந்து வாழ உத்தரவிட்டுள்ளது சவுதி நீதிமன்றம்.
அரபு நாடுகளில் பல நூற்றாண்டுகளாகவே பிறந்த குழந்தைகளுக்கு ‘தாதி' எனப்படும் வளர்ப்புத் தாய்கள் சம்பளம் பெற்றுக் கொண்டு பாலூட்டி, வளர்த்து வரும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும், தன்னிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை தம் சொந்த மக்களாக அந்த பெண்கள் கருதுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு வழி பழக்கமாகும்.
இந்நிலையில், சவுதியில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு தாங்கள் இருவரும் குழந்தைப் பருவத்தில் ஒரே தாதியிடம் பால் குடித்து வளர்ந்தது மூத்த குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. இதன் மூலம் தம்பதிகளாக வாழ்ந்து வந்தவர்களுக்கிடையே உடன்பிறந்தோர் உறவு உண்டானது.
அரபு நாட்டு சட்டதிட்டங்களின்படி, ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதர- சகோதரிகளிடையே நடக்கும் திருமணங்கள் மற்றும் தகாத உறவு போன்றவை ‘ஹராம்', அதாவது பாவச் செயல் எனக் கருதப் படுகிறது.
எனவே, இப்பிரச்சினை நீதிமன்றம் சென்றது. சுமார் 3 மாதங்களாக நடைபெற்ற இவ்வழக்கில் தீர்வு காண நீதிமன்றம் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களில் நிபுனத்துவம் பெற்ற சவுதியின் மூத்த ‘முஃப்தி' ஷெய்க் அப்துல அஜிஸ் அல்-ஷெய்க்-கின் ஆலோசனையை கேட்டது.
சிக்கலான இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு ஆலோசனை வழங்கிய முப்தி, தம்பதியர் இருவரையும் விவாகரத்தின் மூலம் பிரித்து வைக்க ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்து வைத்த நீதிமன்றம், இனி பிரிந்து வாழும்படியும் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 25 ஆண்டு கால இல்லற வாழ்க்கையின் மூலம் 7 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர் அந்த தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தற்போது அக்குழந்தைகளின் எதிர்காலம் தான் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளது.