நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்துமா இங்கிலாந்து?.. "லேட்" ஆகும் என்கிறது!
லண்டன்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த தன்னிடம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிடுவதற்கு காலதாமதம் ஆகலாம் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
இந்த ஆவணங்கள், இங்கிலாந்து அரசின் ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இவற்றை பகிரங்கப்படுத்துவது குறித்து நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இவற்றை வெளியிடுவதற்கு காலதாமதம் ஆகும் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
புரியாத புதிர்
நேதாஜி இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி தீரத்துடன் போராடியவர். இதனாலேயே இவரை காங்கிரஸாருக்குப் பிடிக்காமல் போனது. காந்திக்கும் கூட நேதாஜியின் வழி பிடிக்கவில்லை. ஆங்கிலேயர்களின் உக்கிரம் மறுபக்கம். இதனால் தலைமறைவு வாழ்க்கைக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார் நேதாஜி. அவரது மரணம் குறித்துத்தான் பெரும் சர்ச்சையாக உள்ளது. இத்தனை காலமாகியும்.
மரணத்தில் மர்மம்
நேதாஜி எங்கு, எப்போது, எப்படி இறந்தார்? என்பது புரியாத புதிராக இருந்துவருகிறது. அவரது மரணம் பற்றி பலவித கருத்துகள் வெளியானது. ஆனாலும் எதுவும் உறுதியான தகவலாக இல்லை. 1945-ம் ஆண்டு தைவான் நாட்டில் விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது தைவானில் எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது.
மேற்கு வங்க அரசு வெளியிட்ட ஆவணங்கள்
நேதாஜி பற்றிய பல ஆவணங்கள் மேற்குவங்காள அரசிடமும், மத்திய அரசிடமும் கடந்த 70 ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில், அவர் தொடர்பான கோப்புகளை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தன் வசம் இருந்த 64 ஆவணங்களையும் மேற்கு வங்க அரசு வெளியிட்டு விட்டது.
விமான விபத்தில் இறக்கவில்லை
அதில் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்பது தெரிய வந்தது. விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்பட்ட 1945ம் ஆண்டுக்குப் பிறகும் கூட நேதாஜி உயிருடன் இருந்ததாக அதிலிருந்து தெரிய வந்தது.
மெளனம் காக்கும் மத்திய அரசு
ஆனால் மத்திய அரசு வசம் உள்ள ஆவணங்களில்தான் நேதாஜி குறித்த முக்கிய தகவல்கள் புதைந்துள்ளன. அவரைப் பற்றிய பரபரப்பான தகவல்கள் பல அதில் அடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு மெளனித்து வருகிறது.
இங்கிலாந்து மீது கவனம்
இந்த நிலையில் இங்கிலாந்து அரசிடமும் பல முக்கியத் தகவல்கள் அடங்கிய ரகசிய ஆவணங்கள் உள்ளன. அவற்றை வெளியிட வேண்டும் என்று தற்போது நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக இங்கிலாந்து அரசைத் தொடர்பு கொண்டுள்ளார் நேதாஜியின் கொள்ளுப் பேத்தியான மாதுரி போஸ்.
லேட் ஆகும்
ஆனால் இந்த ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக முடிவெடுக்கவே கால தாமதம் ஆகும் என்று இங்கிலாந்து அரசுத் தரப்பு அவரிடம் கூறியுள்ளது. இதுகுறித்து மாதுரியின் சகோதரரான சூர்ய குமார் போஸ் கூறுகையில், எனது சகோதரி இங்கிலாந்து அரசை அணுகியுள்ளார். போஸ் குறித்த கோப்புகள் இருப்பதை இங்கிலாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் முடிவெடுக்க அவகாசம் தேவை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானையும் அணுகுவோம்
இதேபோல அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் அணுகத் திட்டமிட்டுள்ளோம். போஸ் குறித்த ஆவணங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
நேரு - வல்லபாய் படேலுக்குப் பிடிக்காமல் போன நேதாஜி
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோருக்குப் பிடிக்காமல் போய் விட்டார் நேதாஜி. அவரை தங்களது எதிரியாக இந்த இரு தலைவர்களும் கருதினர். எனவே ரகசிய ஆவணங்கள் கண்டிப்பாக வெளியிட்டாக வேண்டும் என்றார் அவர்.