தாய்ப்பால் கொடுப்பதை குறைகூறிய நபரை உணவகத்தை விட்டு வெளியேற்றிய உரிமையாளர்கள்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் உள்ள உணவகத்தில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது குறித்து புகார் தெரிவித்த நபரை கடையின் உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்டில் இருக்கும் ராக்ஹாம்ப்டன் நகரில் உள்ளது சீஸ் அன்ட் பிஸ்கட்ஸ் உணவகம். அந்த கடையை குழந்தை இல்லாத தம்பதியான ஸ்டீபன்-ஜெசிகா ஆன் ஆலன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.
கடந்த புதன்கிழமை கடைக்கு வந்த நடுத்தர வயது நபர் காபி ஆர்டர் செய்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர சென்றுள்ளார். அங்கு ஒரு பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதை பார்த்த அந்த நபர் கடை உரிமையாளர்களிடம் வந்து அந்த பெண்ணை தனது மார்பகத்தை மறைத்து தாய்ப்பால் கொடுக்குமாறு சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு கடை உரிமையாளர்களோ எங்கள் கடைக்கு பல தாய்மார்கள் வந்து தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். அவர்களிடம் சென்று உங்களின் மார்பகங்களை துணியால் மறைத்து பால் கொடுங்கள் என்று கூற முடியாது என்றும், நீங்கள் வேண்டும் என்றால் வேறு இருக்கையில் அமருங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த நபரோ தாய்ப்பால் கொடுத்த பெண்ணிடம் சென்று ஏதோ தெரிவிக்க அந்த பெண் கோபம் அடைந்துள்ளார். இதையடுத்து கடை உரிமையாளர்கள் அந்த நபரை கடையை விட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.