துருக்கி தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு: 28 பேர் பலி; 12 பேர் படுகாயம்
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காரவில் புதன்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 12-க்கும் அதிகமானோர் குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி தலைநகர் அங்காராவில் அந்நாட்டு பாராளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் பயங்கர சத்தத்துடன் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அந்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட தகவல்படி 28 பேர் பலியாகியுள்ளதாகவும் 12 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் ராணுவ வீரர்களை ஏற்றி செல்லும் பேருந்தினை குறி வைத்து நடைபெற்றதாகவும் அப்போது சிக்னலுக்காக ராணுவ பேருந்து நின்றதால் தாக்குதல் தவிர்க்கப்பட்டதாகவும் துருக்கி ராணுவ தலைமை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அண்மையில் துருக்கி ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.