இனி ஆண்களும் பலாத்கார வழக்கு தொடரலாம் பாஸ்: ஆனால் இது சீனாவில்...
பெய்ஜிங்: சீனாவில் கிரிமினல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி இனி ஆண்களும் பாலியல் பலாத்கார வழக்கு தொடரலாம்.
சீனாவில் இத்தனை காலமாக பெண்கள் மட்டுமே பாலியல் பலாத்கார வழக்கு தொடரும் வகையில் சட்டம் இருந்தது. இந்நிலையில் கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தம் கொண்டு வரும் முன்பு ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்வது குற்றமாக கருத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்வது குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. இனி ஆண்களும் பலாத்கார வழக்கு தொடரலாம். நேற்று வரை ஆண்கள் பலாத்கார வழக்கு தொடரும் உரிமை இல்லாமல் இருந்தனர்.
முன்னதாக 2010ம் ஆண்டில் ஆண் பாதுகாவலர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் ஆணால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் மீது பலாத்கார குற்றம் சுமத்தப்படாமல் வேண்டும் என்றே சக ஊழியரை காயப்படுத்தியதாகக் கூறி அவருக்கு 12 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்தின்படி மைனர் விலைமாதுக்களுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்பதையும் தாண்டி அது பாலியல் பலாத்காரம் என கருதப்படும். ஆண், பெண் யாரையாவது பலாத்காரம் செய்தால் குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
முந்தைய சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட விலைமாதுக்களுடன் உறவு கொண்டால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மேலும் குழந்தையை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.