சீனாவுக்கு பரவிய உருமாறிய கொரோனா... கட்டுப்பாடுகள் இல்லாததால், அதிகரிக்கும் கொரோனா பரவல்?
பெய்ஜிங்: பிரிட்டனில் கடந்த வாரம் புதிய வகை கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளன.
முதன்முதலில் கொரோனா பரவல் சீனாவில் உறுதி செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவின் பாதிப்பும் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணிற்கு தற்போது உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பிரிட்டனிலிருந்து சீனா வந்துள்ளார். வரும்போதே அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அப்பெண் பிரிட்டனிலிருந்து வந்துள்ளதால் அவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகித்த மருத்துவர்கள், அவரது உமிழ்நீர் மாதிரிகளை டிசம்பர் 24ஆம் தேதி சோதனைக்கு அனுப்பினர். அதில் அவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, சீனா கடந்த டிசம்பர் 24ஆம் தேதி முதல் பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து நேரடி விமானங்களுக்கும் தடை விதித்துள்ளன. இந்த புதிய வகை கொரோனா வேகமாகப் பரவும் என்றாலும்கூட இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.