"துரோகி" ஜி ஜின்பிங்! கொதித்து எழுந்த மக்கள் திடீர் போராட்டம்! ட்விஸ்ட் வைக்கும் சீனா? பதற்றம்
பெய்ஜிங்: சீனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அங்கு மற்றொரு புறம் வினோதமான நிகழ்வும் நடந்து வருகிறது.
சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறையே உள்ளது. இதனால் அங்கு நம்மை போலத் தேர்தல் முறைகள் இல்லை. ஒற்றை கட்சி என்பதால் மாற்றுக் கட்சியினர் யாரும் அங்கு இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே அதிபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்போது அதிபராக உள்ள ஜி ஜின்பிங், 2012ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.
ஜெயில், அவமானம், விரட்டியடிப்பு.. காயங்களை புறந்தள்ளி நாட்டையே பிடித்த கதை! யார் இந்த ஜி ஜின்பிங்
சீனா
சீனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் இறுதியில் அதிபர் தேர்வு செய்யப்படுவார். ஜி ஜின்பிங் இதில் 3ஆவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அங்குக் கடந்த பல ஆண்டுகளாகவே எந்த சீன தலைவரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தது இல்லை.
ஜி ஜின்பிங்
ஆனால் அதை மாற்றி மூன்றாவது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார். இதற்காக அவர் அதிபர் பதவி ஏற்றது முதலே நடவடிக்கை எடுத்து வருகிறார். முதலில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் தனது நிர்வாகிகளைக் கொண்டு வந்தார். அடுத்து எதிர்ப்பாளர்களைத் தூக்க ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார். மேலும், ஒருவர் இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்பதையும் 2018இல் சத்தமில்லாமல் நீக்கினார்.
போராட்டம்
கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு இல்லை என்ற போதிலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நமது நாட்டில் போராட்டம் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், சீனாவைப் போன்ற ஒற்றை கட்சி ஆட்சி நடக்கும் நாடுகளில் போராட்டம் எதுவுமே நடைபெறாது. இந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தொடங்கும் முன்னரே, அங்கு ஜி ஜின்பிங் எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அவருக்கு அதிபர் பதவியை நீட்டிக்கக் கூடாது என்று சீன மக்கள் போராட்டம் நடத்தினர்
சர்வாதிகாரி
இதனிடையே இப்போது அங்கு மீண்டும் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் ரிங் ரோடு பாலம் டயரை எரித்தனர். மேலும், "சர்வாதிகாரியும் துரோகியுமான ஜி ஜின்பிங்கை" அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இரண்டு பேனர்களை அந்த பாலத்தில் இருந்து தொங்கவிட்டனர். இது தொடர்பான படங்களை வீசாட்டில் பலரும் பகிர்ந்து உள்ளனர். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கும் சூழலில் இந்தப் போராட்டம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன காரணம்
உலகின் மற்ற நாடுகள் கொரோனா உடன் இணைந்து வாழப் பழிக்கொண்டு வரும் நிலையில், சீனாவிலும் இன்னும் ஜீரோ கோவிட் திட்டம் தான் செயலில் உள்ளது. கொரோனா கேஸ்கள் சற்று அதிகரித்த நிலையில், அங்கு மீண்டும் பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீன மக்களிடையே கொந்தளிப்பு அதிகரிக்க இதுவே காரணம் ஆகும். கட்டுப்பாடுகள் காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவே சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போராட்டம்
இதனிடையே போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபட்டு உள்ளது. போராட்டம் நடந்த இடத்தில் செய்தியாளர்கள் ஃபோட்டோ எடுக்கக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். மேலும், போராட்டம் தொடர்பான படங்களைப் பகிர்ந்த வீசாட் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.