பருவநிலை மாற்றத்தால் குறையும் மீன்வளம்: நாசா ஆய்வில் தகவல்
வாஷிங்டன்: புவி வெப்பமடைவதன் காரணமாக பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் பருவநிலை மாறுபாட்டால் மீன்வளம் குறைந்து வருவதாக நாசா நடத்திய ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்தினால் அமெரிக்காவின் வடக்கு கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா ஆய்வு ஒன்றை நடத்தியது.
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாறுபாட்டால், பசிபிக் பெருங்கடலில், தட்ப வெப்பநிலை உயர்ந்து கடல் நீர் சூடாகிறது. இதனால், தரைப்பகுதியிலும், பருவ காலங்களிலும் ஏற்படும் பாதிப்பு எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.
அது என்ன எல் நினோ:
பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niño-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.
லா நினா..
அதேபோல் எல் நினேவுக்கு எதிர்மறையாக கடல் பரப்பிலும், வான் பகுதியிலும் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண்.
இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும் இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது. இதனால் ஏற்படும் பருவநிலை மாறுபாடு, உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பனிமலைகள் உருகுவது, பருவம் தவறி மழைப் பெய்வது, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன என்று நாசா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடல் நீரின் வெப்பநிலை உயர்வதால் மீன்களுக்கு உணவாகும் தாவரங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பது குறைந்து விடுகிறது. இந்த தாவரங்களும் குறைந்து வருவதால், மீன்களுக்கு உணவு கிடைப்பது குறைந்து வருகிறது. இதனால், மீன் வளம் குறைந்து வருவதாக நாசாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.