'விடாமல் துரத்தும் கொரோனா..' முழுமையாகக் குணமடைய ஓர் ஆண்டு வரை ஆகலாம்.. புதிய ஆய்வில் ஷாக் தகவல்
பெய்ஜிங்: கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு சுமார் ஓர் ஆண்டை கடந்தும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். ஒப்பிட்டளவில் புதிய வைரசான இது தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேக்சின் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க எனத் தனியாக எந்தவொரு முறையும் இல்லை.

கொரோனா ஆய்வுகள்
அதேபோல ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அது எப்போது முழுமையாகச் சரியாகும் என்பதற்கும் தெளிவான தகவல்கள் இல்லை. இந்த கொரோனா வைரஸ் குறித்துப் புரிந்துகொள்ள உலகெங்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த பிறகு ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஓர் ஆண்டுக்குப் பின்னரும் தொடரும் பாதிப்பு
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 1276 உடல்நிலையை அங்குள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அவர்களில் மூன்றில் ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் பாதிப்பு ஆகியவை சுமார் ஓர் ஆண்டு வரை தொடர்ந்துள்ளது. குறிப்பாக, தீவிரமாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் தொடர்ந்துள்ளன. அதேபோல கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிடுகையில் நோயெதிப்பு சக்தியும் குறைவாகவே உள்ளதும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தீவிர பாதிப்பு
இந்த ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் பின் காவ் கூறுகையில், "கொரோனாவில் இருந்து குணமடைந்தோரது உடல்நிலையைக் கடந்த 12 மாதங்களாகக் கண்காணித்து வருகிறோம். அவற்றில் பெரும்பாலானோர் நல்ல முறையில் குணமடைந்துள்ளனர். இருப்பினும், தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு உடல்நிலை பாதிப்பு தொடர்கிறது" என்றார். அதாவது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் சில நோயாளிகளுக்கு ஓராண்டைக் கடந்தும் உடல்நிலை பாதிப்பு தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

6 மாதங்கள்
முன்னதாக இது குழு வேறொரு ஆய்வை மேற்கொண்டிருந்தது. அதில் கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு நான்கில் மூவருக்கு அடுத்த 6 மாதங்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவில் இருந்து குணடமைந்த பிறகு 6 மாதங்களில் 68% பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அதேநேரம் ஓர ஆண்டிற்குப் பிறகு 49% பேருக்கு மட்டுமே உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சோர்வு மற்றும் தசை பலவீனம் அடைவது ஆகியவையே முக்கிய பாதிப்புகளாக உள்ளன.

ஆண்-பெண்
அதேபோல தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு மூச்சுத் திணறலே முக்கிய பிரச்சினையாக இருந்துள்ளது. அதேபோல நுரையில் சிக்கல்களும் கணிசமான நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு மயக்கம் தசை பலவீனமடைவது 1.4 மடங்கு அதிகம் ஏற்படுகிறது. அதேபோல கவலை அல்லது மனச்சோர்வு 2 மடங்கு அதிகமாகவும் நுரையீரல் பாதிப்பு 3 மடங்கு அதிகமாகவும் பெண்களுக்கு ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் வலியுறுத்தல்
ஓர் ஆண்டுக்கும் மேலாக உடல்நிலை பாதிப்புகள் தொடர்வதால், அதற்கு ஏற்றபடி உடல்நிலையைத் தொடர்ந்து பரிசோதனை செய்து வர வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தீவிரமாக கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications