அபுதாபியில் அப்துல் கலாமுக்கு நடந்த இரங்கல் கூட்டம்: தலைவர்கள் புகழாரம்!
அபுதாபி: அபுதாபியில் மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் கூட்டமும், சிறப்புத் தொழுகையும் இந்திய இஸ்லாமிய மையத்தில் நடைபெற்றது.
இந்திய இஸ்லாமிய மையமும் அபுதாபி அய்மான் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் பாவா ஹாஜி தலைமை தாங்கினார். சினான் நூருல்லாஹ் இறைமறை வசனங்கள் ஓதினார். ஐ ஐ சி பொதுச் செயலாளர் கே.வி.முஹம்மது குஞ்சு வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் இரங்கல் உரையை அமீரகத்திற்கான இந்திய தூதர் டி.பி.சீதாராமன், லூலூ குழுமங்களின் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ யூசுப் அலி, அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் ஏ.ஷாஹுல் ஹமீத், இந்திய சமூக மையத்தின் தலைவர் ரமேஷ் பணிக்கர், அபுதாபி கே.எம்.சி.சி தலைவர் நஸீர் மாத்தூல், டாக்டர் அப்துல் ரஹ்மான் மெளலவி ஆகியோர் நிகழ்த்தினர்.
அமீரகத்திற்கான இந்திய தூதர் தனது உரையில்:
மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விஞ்ஞானியாக சாதித்தமைக்காக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்ற சமயத்தில் நான் அன்றைய ஜனாதிபதி திரு.கே.ஆர்.நாராயணன் அவர்களின் பத்திரிக்கை செயலாளராக பணியாற்றினேன். அப்போது அந்த விருதை பெற இருந்த திரு.அப்துல் கலாம் அவர்களின் வருகை மற்றும் தங்க வைக்கும் ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது.
விழாவுக்கு வந்திருந்த தனது அண்ணன் மற்றும் உறவினர்களின் பயண செலவை கலாம் அவர்களே ஏற்றுக் கொண்டார். அவரது இந்த செயல் அரசு பணத்தை விரையம் செய்யக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்தது. ராஷ்ட்ரபதி பவனையும் அவருக்கு சுற்றி காண்பித்தேன். அப்போது அவரே இந்த மாளிகையில் வந்து ஐனாதிபதியாக அமருவார் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.
அடுத்து பேசிய லூலூ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பத்மஶ்ரீ டாக்டர் யூசுப் அலி அவர்கள், மிக உருக்கமாக அப்துல் கலாம் அவர்களின் இழப்பு நாட்டிற்கும், நமக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதை குறிப்பிட்டு, கலாம் அவர்கள் எந்நேரமும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களின் சிந்தனையிலேயே இருந்தார் என்பதற்கு தனது வாழ்வில் அவருடன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சுட்டி காண்பித்தார். அப்துல் கலாம் அவர்கள் அமீரகம் வருகை தந்தபோது ஏர்போர்ட்டில் இருந்து அவருடன் பயணிக்கும் தருணத்தில் கடல் நீரை அமீரகத்தில் குடிநீராக மாற்றும் செயல்திட்டம் குறித்து பேச்சு வந்தபோது, நான் உடனே அந்த திட்டம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றார்.
அந்த சமயம் ரமலான் மாதம். அவரும், நாங்களும் நோன்பு வைத்திருந்தோம். நான் அவரிடம் நோன்பு வைத்திருப்பதால் பிறகு பார்க்கலாமே என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தாமல் கடல் நீரை குடிநீராக்கும் தேவை நம் நாட்டில் சில மாநிலங்களில் செயல்படுத்த வேண்டியுள்ளது அதில் தமிழ்நாடும் ஒன்று என தெரிவித்து அவர் தொடர்ந்து பயணிக்க சொன்னதை நினைவுகூர்ந்து அவரை மிகவும் பாராட்டி கலாம் அவர்கள் இந்திய நாட்டில் ஒரு சிறந்த தலைவராக திகழ்ந்தார் என்பதை பெருமையுடன் சொன்னார்.
இறுதியாக பேசிய அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தனது உரையில்:
அப்துல் கலாம் அவர்கள் எவ்வாறு ஒரு பன்முக பணிப்பாளராக இருந்தார் என்பதை விளக்கினார். அவருடைய உரையில், கலாம் அவர்களை முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக நாம் நேசிக்கிறோமா? அவர் ஒரு மாபெரும் விஞ்ஞானி என்பதற்காக நேசிக்கிறோமா? என்பதை விட அவர் ஒரு சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த எளிமையை கடைபிடித்ததால் அவருடைய எளிமை வாழ்வினாலும் கவரப்பட்டவர்களாக இன்று நாம் அவரை புகழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி, கடந்த மூன்று தினங்களாக நாமெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்ததும் இதனால் தான் என்று அவருடைய இழப்பு உலக முஸ்லிம் சமூகத்தின் இழப்பாகும் என்பதை உருக்கமாக கூறி இப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவர் தன் வாழ்க்கையையே நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணித்த மாமனிதருக்கு மரியாதை செலுத்த உங்கள் அனைவருக்கும் அய்மான் சார்பாகவும், மற்றும் தமிழக அமைப்புகள் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
நன்றியுரையை பொருளாளர் சுக்கூர் அலி கூற மெளலவி மம்மிகுட்டி முஸ்லியார் மறைந்த மக்கள் ஜனாதிபதியின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அய்மான் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது, அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவர் கீழை சையத் ஜாபர், மற்றும் நிர்வாகிகளான ஷர்புத்தீன், கவியன்பன் கலாம், ரஷீத் மரைக்காயர், அய்யம்பேட்டை ஜாபர் அலி, மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம், ரியாளுஸ் ஸாலிஹீன் ஆசிரியர் அப்துல் ரஹ்மான் ஆலிம், ஐ.எம்.எப் தலைவர் முஹையத்தீன் அப்துல் காதர், ஷர்புத்தீன் ஹாஜி, காதர் மீரான் பைஜி, அமீரக காயிதே மில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, பஹ்ருல் பய்யாஜ், தமுமுக அபுதாபி நிர்வாகிகள் உஸ்மான், அல் அமீன், எஸ்.டி.பி.ஐ. அபுதாபி தலைவர் கியாசுத்தீன், வலசை பைசல், ஷபீக், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.ரபி அஹமத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.