சீனா முழுவதுமே நாய் இறைச்சிக்கு தடை வருகிறது- ஹாங்காங்கில் பிரபல பாம்பு கறி ஹோட்டல் மூடல்
பெய்ஜிங்: கொரோனா கோரத் தாண்டவத்தைத் தொடர்ந்து சீனா முழுவதும் நாய் இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. இதனிடையே ஹாங்காங்கில் பிரபலமான பாம்பு கறி ஹோட்டலும் இழுத்து மூடப்பட்டுள்ளது.
Recommended Video
உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்துதான் பரவ தொடங்கியது. சீனாவில் நாய், வவ்வால் உள்ளிட்ட இறைச்சியை அதிகம் உண்பதாலேயே கொரோனா வைரஸ் பரவுகிறது என்பது பொதுவான கருத்து.

ஆனால் இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் சீனாவின் இறைச்சி நுகர்வு கலாசாரம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சீனாவின் ஷென்ஸென் மாகாணத்தில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சீனா அரசு, நாயை கால்நடையாக கருதக் கூடாது; உணவுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதனால் சீனாவில் நீண்டகாலமாக இருந்து வரும் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஹாங்காங்கில் பிரபலமான பாம்பு இறைச்சி ஹோட்டலான She Wong Yee, கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த ஹோட்டல் மேனேஜர் லோ ஷியாங் ஹெய் கூறுகையில், சீனாவின் புத்தாண்டு தொடக்கம் முதலே வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துவிட்டது;. கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைந்துவிட்டதால் மூட நேரிடுகிறது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications