நிலமெல்லாம் ரத்தம்.. அலறல் சத்தம்! துருக்கி, சிரியாவை துரத்தும் சோகம் -50,000ஐ தாண்டிய நிலநடுக்க பலி
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளது.
அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நாட்கள் கடந்தும் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படத் தொடங்கின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மீட்புப் படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை பன்னாட்டு குழுவினர் உதவியுடன் மீட்டனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.

பேரழியை ஏற்படுத்திய நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இதனால் துருக்கியிலும், அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியிலும் இடிந்து விழுந்தன. 2 வது நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு இன்னும் மோசமடைந்தது.

உருக்குலைந்த நகரங்கள்
3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி பேரழிவுகளை ஏற்படுத்தியது. நிலநடுக்கங்களின் தொடர்ச்சியாக பல முறை நில அதிர்வுகளும் துருக்கியில் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் வெடிப்பு ஏற்பட்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளின் காரணமாக தரைமட்டமாகின.

உயரும் உயிரிழப்புகள்
ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவின் நகரங்கள் கட்டிடங்கள் இடிந்தும், உருக்குலைந்த நிலையிலும் காணப்படுகின்றன. இடைப்பட்ட நாட்களிலும் பல முறை நிலநடுக்கம் துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்டு உள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதிகரித்து இருக்கிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில் 44,218 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சிரியாவில் 5,914 பேர் இதுவரை நிலநடுக்கத்தால் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

15 லட்சம் பேர்
இரு நாடுகளிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் நாட்கள் செல்ல செல்ல பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருநாட்டு மக்களும் ஒவ்வொரு நாள் காலையையும் மரண செய்திகளுடனே தொடங்குகிறார்கள். நிலநடுக்கம் காரணமாக 15 லட்சம் மக்கள் வீடற்றவர்களாக மாறி உள்ளார்கள் என ஐநா அறிவித்து இருக்கிறது.

குடியிருப்புகள் கட்டும் துருக்கி
துருக்கி அரசு 2 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளையும் 70 ஆயிரம் கிராம வீடுகளையும் 15 லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்ட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் எர்துகான் அறிவித்து உள்ளார். இதற்காக 25 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று அமெரிக்காவின் ஜேபி மோர்கன் வங்கி கணக்கிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications