வலி நிவாரணிகளால் அதிகளவில் உயிரிழக்கும் அமெரிக்கா, கனடா மக்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
வாஷிங்டன்: சாதாரண வலி நிவாரணிகளை உட்கொள்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் அதிகரித்து வருவதாக அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
பொதுவாக கொள்ளை நோய்களால் உயிரிழப்பவர்கள் குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படும். ஆனால், வலியைக் குறைக்க வேண்டிய வலி நிவாரண மாத்திரைகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் கொல்லும் பொருளாக மாறி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஹெராயின் மற்றும் கோகைன் என இரண்டு போதைப் பொருட்களை சேர்த்து உண்பதால் உயிரிழப்பவர்களை விட வலி நிவாரணிகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மரணம் குறித்த ஆய்வு...
கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகம் வலி நிவாரணிகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் நிக்கோலஸ் தனது குழுவினருடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.
ஆய்வுக்கான காரணம்...
ஆய்வு குறித்து நிக்கோலஸ் கூறுகையில், ‘கடந்த இருபது ஆண்டுகளில் வலி நிவாரணிகளால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதற்குக் காரணம் கண்டுபிடிக்கவே இந்த ஆய்வை மேற்கொண்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
17 காரணிகள்...
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இக்குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த மரணங்களுக்கு 17 விதமான காரணிகள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. அதில், நோயாளிகளுக்கு வலியைக் குறைக்க அளிக்கப் படும் வலிநிவாரணிகளில் போதை மருந்து போன்ற பொருட்கள் கலந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அபின் போன்ற போதைப்பொருள்...
அதாவது வலி நிவாரண மாத்திரைகளில் ஆக்சிகோட்டின் மற்றும் மெத்தோடன் போன்றவை அதிகளவில் கலந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிர்க் கொல்லி...
மேலும், நீண்ட காலம் இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உடல்நிலை பாதிப்படைவதாகவும், அதுவே காலப்போக்கில் உயிர்க்கொல்லிகளாக மாறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இன்ன பிற காரணிகள்...
அதேபோல், இத்தகைய வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் அதனைத் தொடர்ந்து வேறு சில ஒவ்வாமையான மருந்துகள் சாப்பிடுவது, மது அருந்துதல் மற்றும் சமூக சூழ்நிலை கூட மரணத்திற்கு காரணமாவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
முதலிடத்தில் அமெரிக்கா...
இது போன்ற போதை மருந்து கலந்த வலி நிவாரணிகளை சாப்பிட்டு பலியாவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், கனடா இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
இணைய ஆய்வு...
இது போக, இணையம் வாயிலாக மருத்துவம் பார்ப்பதும் அபாயகரமானது என எச்சரிக்கிறது இந்தக் குழு. மருத்துவர்கள், நோயாளிகள், மருந்துக் கம்பெனிகள் என இத்தகைய மரணங்களில் பலருக்கும் பங்கிருப்பதாக ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விழிப்புணர்வு ஆய்வு...
தற்போதைய இந்த ஆய்வு முடிவை மற்ற நாடுகள் எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நல்லது என தெரிவித்துள்ளார் நிக்கோலஸ்.