பாகிஸ்தான் பதிலடி: 2 தீவிரவாதிகள் நேற்று இரவு தூக்கிலிடப்பட்டனர்!!
பைசலாபாத்: பெஷாவர் தாக்குதலுக்கு பதிலடியாக 2 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு நேற்று இரவு தூக்கிலிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி 132 பள்ளிக் குழந்தைகளை படுகொலை செய்தனர். இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் தூக்கு தண்டனை மீதான இடைக்கால தடை நீக்கப்பட்டது.
மேலும் தீவிரவாத வழக்கின் குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிபர் தம் முன் இருந்த தீவிரவாதிகளின் கருணை மனுக்களை அடுத்தடுத்து நிராகரித்தார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதியோ 48 மணிநேரத்துக்குள் 3 ஆயிரம் தீவிரவாதிகளை தூக்கிலிட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் 2009-ம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையிடத்தை தாக்கிய அகீல் என்கிற டாக்டர் உஸ்மான், 2003-ம் ஆண்டு பர்வேஸ் முஷரப் மீது தாக்குதல் நடத்திய அர்ஷத் முகமது ஆகியோர் நேற்று பைசலாபாத் சிறையில் இரவு 9 மணிக்குத் தூக்கிலிடப்பட்டனர்.
இருவரும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூக்கு தண்டனை மீதான தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 8 ஆயிரம் மரண தண்டனை கைதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.