கினியாவில் எபோலா காய்ச்சல் 59 பேர் பலி
கொனாக்ரி,கினியா: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவிலும் மற்றும் அதன் எல்லைப் பகுதியான சியாரா லியோனிலும் எபோலா காய்ச்சல் பரவியுள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக 59 பேர் வரை அடுத்தடுத்து பலியாகியுள்ளதாக கினியா அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கினியாவின் தென்கிழக்கு நகரங்களிலும், தலைநகர் கொனக்ரியிலும் கடந்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து இரத்த சோகை நோய்க்காய்ச்சலான எபோலா தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
மனிதர்களிடத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கடுமையான காய்ச்சலான இதில் இறப்பு எண்ணிக்கையும் 90 சதவிகிதமாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்தக் காய்ச்சலால் இதுவரை 59 இறப்புகள் உட்பட 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் லியான் சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்ட 12 ரத்த மாதிரிகளில் 6 முடிவுகள் இந்தக் காய்ச்சலை உறுதி செய்துள்ளன என்று கினியாவின் சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் தலைவரான டாக்டர் சகோபா கெய்ட்டா குறிப்பிட்டார்.
இதுதவிர கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கினியாவிலும், சியாரா லியோனிலும் நடைபெற்றுள்ள சம்பவங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு போன்ற ஒரேமாதிரியான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக உலக சுகாதாரக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளும் நோய் கட்டுப்பாட்டு மையத்தில் பரிசோதனையில் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னால் இது போன்ற நோய்த்தாக்கம் கினியாவில் பதிவு செய்யப்பட்டதில்லை என்பதும் அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.