காஸா மீதான இஸ்ரேலின் தொடரும் வெறியாட்டம்.. 200 பேர் பலி- எகிப்து சமரச முயற்சி!!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகள் மீதான இஸ்ரேலின் வெறியாட்டம் நீடித்து வருகிறது. இடைவிடாது இஸ்ரேல் வீசிவரும் குண்டுமழைக்கு அப்பாவி பொதுமக்கள், பிஞ்சு குழந்தைகள் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேலைச் சேர்ந்த 3 இளைஞர்களை காஸாவில் இயங்கும் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்று, கொன்றனர். இதற்கு பதிலாக இஸ்ரேலில் பாலஸ்தீன சிறுவன் படுகொலை செய்யப்பட்டான்.
இருதரப்பு மோதல்
இதைத் தொடர்ந்து இருதரப்பு இடையே மோதல் வெடித்தது. ஹமாஸ் தரப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீச, இஸ்ரேலோ உக்கிரமான வான்வழித் தாக்குதலை நடத்தியது.
200க்கும் மேற்பட்டோர் படுகொலை
கடந்த சில நாட்களாக தொடர்ந்து இஸ்ரேல் நடத்தி வரும் இந்த வான்வழித் தாக்குதலில் பிஞ்சு குழந்தைகள், பெண்கள் என அப்பாவி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் படுகொலையாகி உள்ளனர்.
ஆளில்லா விமானம்
இந்த தாக்குதலுக்கு நடுவே பாலஸ்தீனப் பகுதிக்குள் இஸ்ரேல் தரைப்படை நுழைந்து தங்களது நாட்டவரை கடத்தி கொன்றவர்களை கைது செய்தும் வருகிறது. இதில் ஹமாஸ் பகுதி எம்.பி.க்கள் மூவரும் பிடிபட்டுள்ளனர்.
அகதிகளாக வெளியேற்றம்
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக முகாம்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எகிப்து சமரச முயற்சி
இதனிடையே ஹமாஸ் இயக்கத்தினர் ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் நோக்கி அனுப்பினர். அதை அந்நாடு சுட்டு வீழ்த்தியது. தொடரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து சமரச முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஏற்படுத்த எகிப்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் நிராகரிப்பு
ஆனால் எகிப்தின் இந்த சமாதான முயற்சியை நிராகரிப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. எந்த ஒரு நிலையிலும் இஸ்ரேலுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை.. பதிலடி தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இதனால் அங்கு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.