இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது தவறு: போப் பிரான்சிஸ்
இஸ்தான்புல்: இஸ்லாத்தை வன்முறை மற்றும் தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது தவறு என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் மூன்று நாட்கள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி சென்றார். சனிக்கிழமை அவர் துருக்கியின் மிகவும் பிரபலமான மசூதியான இஸ்தான்புல் நகரில் இருக்கும் ப்ளூ மசூதிக்கு சென்று சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். அவர் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வாட்டிகன் கிளம்பிய போப் பிரான்சிஸ் கூறுகையில்,
மக்கள் இஸ்லாத்துடன் தீவிரவாதத்தை ஒப்பிடுகிறார்கள். இதனால் தான் மேற்கத்திய நாடுகளில் வாழும் பல முஸ்லீம்கள் பாதிக்கப்படுகிறார்கள். இஸ்லாத்துடன் தீவிரவாதத்தை ஒப்பிடுவது தவறு. இந்த போக்கை மாற்ற தீவிரவாத்தத்திற்கு உலக முஸ்லீம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நான் துருக்கி அதிபரிடம் தெரிவித்துள்ளேன். முஸ்லீம்களின் புனித நூலான குர்ஆன் அமைதியை போதிக்கிறது.
கிறிஸ்தவர்கள் அனைவரும் அடிப்படைவாதிகள் என்று கூற முடியாது. ஒரு சிலர் தான் அடிப்படைவாதிகள். அதே போன்று அனைத்து மதங்களிலும் சிறிய குழுக்கள் இருக்கத் தான் செய்யும். அதை வைத்து பொதுவாக பேசிவிடக் கூடாது என்றார்.
இந்த 3 நாட்கள் பயணத்தில் போப் பல முறை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.