'நட்பு நாடுகள் கூட எங்களை பிச்சைக்காரர்கள் என நினைக்கிறாங்க'.. புலம்பும் பாகிஸ்தான் பிரதமர்
இஸ்லாமாபாத்: ''நட்பு நாடுகள் கூட நம்மை பிச்சைக்காரர்கள் என இப்போது நினைக்க தொடங்கி விட்டனர் என்றும், நமது நட்பு நாட்டிற்கு நாம் சென்றாலோ அல்லது போன் செய்தாலோ கூட.. பணம் கேட்டு பிச்சை எடுக்க வந்துவிட்டார்கள் என்பதே அவர்களின் நினைப்பாக உள்ளது என்றும்'' பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்ததால், நாட்டின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
குறிப்பாக அந்நாட்டின் மூன்றில் ஒருபங்கு வெள்ளத்தால் மிதந்தது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
பாகிஸ்தானை மூழ்கடித்த வெள்ளம்! காரணமே இதுதானாம்.. வளர்ந்த நாடுகள் மீது பாயும்
பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி
ஏற்கனவே பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அந்நாடு தவித்து வரும்நிலையில், மறுபக்கம் மழையும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டும் என்று அந்நாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறிவருகின்றன. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த பாகிஸ்தானுக்கு வெள்ளம் ஏற்படுத்திய சேதம் பேரிடியாக அமைந்தது.
ஒருவர் மீது ஒருவர் குறை கூறுகின்றனர்
நிதி நிலையை சீர்படுத்த முடியாமல் கையை பிதுக்கி கொண்டு இருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது என அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பினாலும் வெள்ளம் ஏற்படுத்திய பொருளாதார இழப்பு பாகிஸ்தானுக்கு கடும் சவாலாகவே உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உள்ளது.
பிச்சைக்காரர்கள் நாடு என்றே
இந்த நிலையில் பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் கன்வென்ஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நட்பு நாடுகள் கூட தற்போது நம்மை மதிப்பது இல்லை என்றும் பிச்சைக்காரர்கள் நாடு என்றே கருதுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ''நட்பு நாடுகள் கூட நம்மை பிச்சைக்காரர்கள் என இப்போது நினைக்க தொடங்கி விட்டனர். நமது நட்பு நாட்டிற்கு நாம் சென்றாலோ அல்லது போன் செய்தாலோ கூட.. பணம் கேட்டு பிச்சை எடுக்க வந்துவிட்டார்கள் என்பதே அவர்களின் நினைப்பாக உள்ளது'' என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் மோசமாகிவிட்டது
வெள்ள பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து பேசிய ஷெபாஸ் ஷெரீப், வெள்ள பாதிப்புக்கு முன்பே பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தள்ளாடத்தொடங்கிவிட்டது. இதனால், வெள்ளத்திற்கு பிறகு இது மேலும் மோசமாகிவிட்டது. பொருளாதாரம் சீர்குலைந்து போவதற்கன விளிம்பில் பாகிஸ்தான் உள்ளது. நாங்கள் ஏப்ரல் மாதத்தில் ஆட்சி அமைத்த பிறகு மேற்கொண்ட கடின உழைப்பினால், பொருளாதார ஸ்திரமற்ற தன்மையை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கிறோம்.
இம்ரான் கானே காரணம்
நாட்டில் பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததற்கு முந்தைய இம்ரான் கான் அரசே காரணம். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை மீறி இம்ரான் கான் அரசு செயல்பட்டதன் விளைவாக தற்போது அவர்கள் போடும் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்'' என்றார்.
எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
நம்மை விட சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி சென்றுள்ளதாக தெரிவித்த ஷெபாஸ் ஷெரீப், கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை எடுப்பதற்காக ஒரு தட்டை ஏந்திக்கொண்டு சுற்றி வருகிறோம் என மிக விரக்தியாக பேசினார். மேலும், வரும் குளிர்காலத்தில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்த ஷெபாஸ் ஷெரீப், எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க போதுமான ஏற்பாடுகளை செய்ய முடியாமல் திணறி வருவதாகவும் தெரிவித்தார்.