புதிய சோதனை முறையை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.. யூசர்களிடம் செல்பி கேட்கிறது.. ஏன் தெரியுமா?
பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளிகளிடம் புதிதாக செல்பி கேட்டு சோதனை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
நியூயார்க்: பேஸ்புக் பயனாளிகளிடம் இனி வரும் காலங்களில் அந்த நிறுவனம் கட்டாயமாக செல்பி புகைப்படங்களை வெளியிட சொல்லும் என்று கூறப்படுகிறது. சில சோதனைகளை செய்வதற்காக இப்படி புகைப்படங்கள் கேட்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை முறை பேஸ்புக்கின் புதிய அப்டேட்டில் இருந்த அறிமுகம் ஆக இருக்கிறது. ஏற்கனவே பேஸ்புக் வெப் பயன்படுத்தும் நபர்கள் சிலரிடம் இந்த சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
பேஸ்புக்கின் இந்த புதிய சோதனை முறை காரணமாக பல எதிர்ப்புகள் உருவாகி இருக்கிறது.
பேஸ்புக்கில் புதிய சோதனை
பேஸ்புக்கின் அடுத்த அப்டேட்டில் புதிய சோதனை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி பேஸ்புக் ஆப் நம்முடைய செல்பி புகைப்படத்தை சோதனைக்காக கேட்கும். மேலும் பேஸ்புக் நம்மிடம் செல்பி கேட்டவுடன் உடனடியாக நாம் செல்பி எடுத்து அப்லோட் செய்தால் மட்டுமே நம்முடைய கணக்கு வேலை செய்யும். இல்லையென்றால் பேஸ்புக் உடனடியாக நம்முடைய கணக்கை முடக்கிவிடும் என்று கூறப்படுகிறது.
ஏன்
இந்த சோதனை பொய்யான கணக்குகளை கண்டுபிடிப்பதற்காக செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் சில சமயங்களில் கணினி மூலம் சில பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்படும். அதையும் இதன் மூலம் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனை அனைவரிடமும் செய்யப்படாது என்றும் பேஸ்புக் அப்ளிகேஷனுக்கு யார் மீது எல்லாம் சந்தேகம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் சோதனை செய்யப்படுவார்கள்.
பழைய சோதனைக்கு மாற்று
இந்த சோதனை நீண்ட காலமாக இருந்த பழைய சோதனைக்கு மாற்றாக வந்துள்ளது. 'கேப்ட்சா' என்று அழைக்கப்படும் பழைய சோதனையில் பெட்டிக்குள் இருக்கும் குழப்பமான வார்த்தைகளை டைப் செய்ய சொல்லி சோதனை செய்யப்படும். இந்த பழைய சோதனையை தொழில்நுட்பத்தை கொண்டு எளிதாக ஏமாற்றவிடலாம் என்பதால் புதிய செல்பி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வலுக்கும் எதிர்ப்பு
இந்த நிலையில் பேஸ்புக்கின் இந்த புதிய சோதனை முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது புகைப்படத்தையும் அடையாளத்தையும் வெளியிட விரும்பாத நபர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. சமீப காலங்களில் பேஸ்புக் கொண்டு வரும் திட்டங்களான நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரான அறிவிப்பு, உள்நாட்டு மொழிகளில் பெயர் வைக்க முடியாத அறிவிப்பு என எல்லாமும் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.