கரையை கடந்தது ஃபுளோரன்ஸ் புயல்: சுனாமி போல் எழுந்த அலைகள்.. 5 பேர் பலி.. நெருக்கடி நிலை அறிவிப்பு!
அமெரிக்காவை தாக்கிய ஃபுளோரன்ஸ் புயலால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
வாஷிங்டன்: அமெரிக்காவை அச்சுறுத்திய ஃபுளோரன்ஸ் புயல் கரையை கடந்தது. ஃபுளோரன்ஸ் புயலால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. கூடவே கடல்நீரும் ஊருக்குள் புகுந்ததால் வடக்கு கரோலினாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த வாரம் அட்லாண்டிக் பெருங்கடலின் வட மேற்கு பகுதியில் ஒரு புயல் சின்னம் உருவானது. இந்தப் புயலுக்கு 'புளோரன்ஸ்' என பெயரிடப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் அதி தீவிர புயலாக இந்த ஃபுளோரன்ஸ் புயல் இருக்கும் என கூறப்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டன. வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கரையை கடந்தது ஃபுளோரன்ஸ்
இந்நிலையில் இந்த ‘ஃபுளோரன்ஸ்' புயல், வில்மிங்டன் பகுதியில் கரையை கடந்தது. இந்த புயல் அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகளை நேற்று தாக்கத் தொடங்கியது. வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மாகாணங்களின் உள்புற பகுதிகளை நோக்கி இந்தப் புயல் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.
வலு குறைந்தது
இந்தப் புயல் மிகவும் ஆபத்துகளை விளைவிக்கும் என கூறி 4-வது பிரிவில் முதலில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் படிப்படியாக வலுவிழந்து 3-வது பிரிவுக்கும், 2-வது பிரிவுக்கும் தரம் இறக்கப்பட்டு இறுதியில் 1-வது பிரிவில் வைக்கப்பட்டு உள்ளது.
பெரும் அழிவை ஏற்படுத்தும்
இருப்பினும் இந்தப் புயல் உயிர் ஆபத்துகளை பெருமளவில் ஏற்படுத்தும், வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் புயல் பெரும் அழிவை ஏற்படுத்தும் என வடக்கு கரோலினா மாகாண கவர்னர் ராய் கூப்பர் எச்சரித்து உள்ளார்.
பெரும் வெள்ளப்பெருக்கு
‘ஃபுளோரன்ஸ்' புயல் அடித்து ஆட தொடங்கியுள்ளதால் வடக்கு கரோலினா மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுனாமி போல் எழுந்த அலைகள்
சுனாமி போல் பல அடி உயரத்துக்கு எழுந்த அலையால் கடல் நீர், ஊருக்குள் புகுந்து உள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு கரோலினாவில் ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இருளில் மூழ்கியது வடக்கு கரோலினா
வடக்கு கரோலினா மாகாணத்தில் 1½ லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இருப்பினும் 30 லட்சம் வீடுகள், நிறுவனங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்சார வினியோகம் சீராவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள்கூட ஆகலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மீட்பு பணிகள் துரிதம்
1,400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் பிற மாகாணங்களில் இருந்து நெருக்கடி கால பணியாளர்கள், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மாகாணங்களுக்கு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து வெர்ஜினியா மாகாணத்திலும் 17 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நெருக்கடி நிலை அறிவிப்பு
இதனிடையே வடக்கு கரோலினாவில் புயலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடரும் என்பதால் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, வெர்ஜினியா, ஜார்ஜியா, மேரிலாந்து மாகாணங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.