சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் (96) காலமானார்! அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சி
பெங்ஜிங்: சீனா முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 96. நவீன சீனாவை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்த இவர், தற்போது உயிரிழந்துள்ளது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த புற்றுநோயால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஜியாங் ஜெமின், இன்று உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கும், ராணுவத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் கட்சி கடிதம் வாயிலாக தகவல் தெரிவித்திருக்கிறது.
ஸ்பீடாக பரவும் கொரோனா.. பதறும் ஜி ஜின்பிங்.. பதவியை ராஜினாமா செய்ய வெடித்த போராட்டம்.. பரபர சீனா
அறிவிப்பு
கடிதத்தில், "தோழர் ஜியாங் ஜெமினின் இழப்பானது கட்சிக்கும், ராணுவத்திற்கும் மற்றும் நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆங்காங்கே சில போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் ஜியாங் ஜெமினின் மறைவு என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு மக்கள் கூறியுள்ளனர். நவீன சீனாவை கட்டமைத்ததில் முக்கிய பங்கு ஜியாங் ஜெமினுக்கு இருக்கிறது என்றும், இவர் ஒரு சிறந்த மார்க்சிஸ்ட். மட்டுமல்லாது, சிறந்த ராஜதந்திரியும் கூட என சீன கம்யூனிஸ்ட் கட்சி புகழாரம் சூட்டியிருக்கிறது.
பிம்பம்
சீனா 1949ல் விடுதலையடைந்தாலும் கூட அதனுடைய வளர்ச்சி என்பது மந்தமான நிலையில்தான் இருந்தது. ஆனால், அதன் பின்னர் வளர்ச்சி சீரான வேகத்தில் அதிகரித்தது. இதற்கு ஜியாங் ஜெமினும் ஒரு காரணமாவார். 1989ல் தியனன்மென் போராட்டத்திற்கு பின்னர் அதுவரை கட்சி பொதுச் செயலாளராக இருந்த ஜாவோ ஜியாங் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஜியாங் ஜெமின் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் கைமேல் பலனளித்தன. சீனா கம்யூனிஸ்ட் நாடு என்றும் அங்கு போனால் சொத்து சேர்க்க முடியாது எனவும் பலரும் பயந்திருந்த சூழலில் கம்யூனிசம் குறித்தான தவறான பிம்பங்களை இவர் உடைத்தெறிந்தார்.
கட்சி
அப்போதிலிருந்து 2002 வரை கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். இதற்கிடையில் நாட்டின் அதிபராக 1993ம் ஆண்டிலிருந்து 2003 வரை பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னரும் இவருக்கு நிறைய செல்வாக்கு இருந்தது. எந்த அளவுக்கு இவர் புகழப்படுகிறாரோ அதே அளவுக்கு இவர் மீது சில விமர்சனங்களும் வைக்கப்பட்டது. அதாவது, கட்சியின் மத்திய குழுவில் தனக்கு ஆதரவானவர்களை இவர் கொண்டு வந்தார் என்றும், இவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகும் கூட அவரது ஆதிக்கம் தொடர்ந்திருந்தது எனவும் சிலர் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தற்போதைய அதிபர் ஜி ஜிங் பிங்கை இவர்தான் தனது செல்வாக்கால் அதிபராக்கினார் என்றும்கூட சொல்கிறார்கள்.
சீனா
தற்போது சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவே சில நேரங்களில் சீனாவின் விஷயத்தில் தலையிட தயங்குகிறது. ஆண்டுக்கு சராசரியாக 9% வளர்ச்சியை சீனா உறுதி செய்து வருகிறது. அதேபோல வேலைவாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் சீனா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஐ.நா பாராட்டி வருகிறது. இதற்கெல்லாம் தொடக்க புள்ளியாக இருந்தவர்தான் ஜியாங் ஜெமின். இவரது காலத்தில் வறுமையிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டன. உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்டிருந்தாலும், சீனாவில் வறுமையின் அளவு மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.