'பிராங்க்' அட்டகாசம்.. ஊரையே கலங்கடித்த 'கங்காரு மனிதன்'.. போலீஸில் சிக்கி சின்னாபின்னமான யூடியூபர்
பாரீஸ்: கங்காருவை போல வேடமிட்டு யூடியூபர் ஒருவர் செய்த 'பிராங்க்', ஒரு நகர மக்களையே கலங்கடித்து விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
ஊரையே பயறுமுறுத்தி வைத்திருந்த அந்த கங்காரு மனிதன், கடைசியில் போலீஸிடமே குறும்பு செய்து சிக்கி செமத்தியாக வாங்கிக் கட்டி இருக்கிறார்.
தற்போது எங்கு பார்த்தாலும் 'பிராங்க்' வீடியோக்கள் செய்வது இளம் தலைமுறையினரின் வாடிக்கையாகி விட்டது. அதுவும் இப்போது பலரும் யூடியூப் சேனல்களை வேற தொடங்கி விட்டார்களா.. கேட்கவே வேண்டாம். தினசரி சமூக வலைதளத்தை திறந்தாலே 'பிராங்க்' வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மேற்க உங்களது..கிழக்க எங்களது! வந்ததே 3 பேரு..மாவட்டத்தை பிரித்து கொடுத்த ஓபிஎஸ்! கடுப்பான ர.ர.க்கள்
எல்லை மீறும் பிராங்குகள்..
இந்த பிராங்குகளில் மிகச் சிலவை மட்டுமே பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது. மற்றவை எல்லாம் மக்களை துன்புறுத்தி, அவர்கள் கஷ்டப்படும் போது நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கும் செயல்களாகவே உள்ளன. இதுபோன்ற பிராங்குகளுக்கு பல நாடுகளில் நீதிமன்றங்களும், காவல்துறையும் தடை செய்து வருகின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற பிராங்ஸ்டர்கள் (pranksters) அதிக அளவில் இருக்கின்றனர். இவர்களின் செயலும் அத்துமீறியதால் இங்கும் பல மாநிலங்களில் பிராங்க் வீடியோ செய்ய தடை விதிக்கப்பட்டு வருகிறது.
பிராங்க்
இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த ஒரு பிரபல யூடியூபர் செய்த 'பிராங்க்' தான், இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற பிராங்க் வீடியோக்களை காட்டிலும் இவரது இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த 'பிராங்க்' இருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸை சேர்ந்தவர் ரேமி காலியார்ட் (32). மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரேமி காலியார்ட், பள்ளிப்படிப்பை முடித்ததும் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஷு கடையில் அவர் வேலைக்கு சேர்ந்தார்.
காலியார்ட்
இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் நஷ்டம் காரணமாக, அந்த ஷூ கடையில் உள்ள பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் ரேமியும் ஒருவர். திடீரென வேலை இல்லாமல் போனதால் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரேமியும் பல இடங்களில் வேலை தேடி பார்த்தார். கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது, ஏன் நாம் யூடியூப் சேனலை தொடங்கக் கூடாது என அவருக்கு கேள்வி எழுந்தது. இயல்பாகவே நகைச்சுவை உணர்வுக் கொண்டவரான ரேமி, அதை வைத்தே கன்டென்ட்டுகளை கொடுக்கலாம் என முடிவு செய்தார். இதுகுறிதத்து தனது நண்பர்களிடமும் அவர் கூறினார் அவர்களும் ரேமியை ஊக்குவிக்கவே, சூட்டோடு சூடாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார்.
வியூஸ்
முதலில் நண்பர்களுடன் சேர்ந்து நகைச்சுவை வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வந்தார் ரேமி. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு அந்த வீடியோக்கள் வியூஸ் (views) போகவில்லை. இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசித்து பிராங்க் வீடியோக்களை செய்ய முடிவெடுத்தார் ரேமி காலியார்ட். அதன்படி, போலீஸாக நடித்து மக்களை ஏமாற்றுவது; தீயணைப்பு வீரர் போல வேடமிட்டு வந்து மக்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற பிராங்குகளில் அவர் ஈடுபட்டார். என்ன ஆச்சரியம்.. அவர் எதிர்பார்த்தை விட அவரது வீடியோக்களுக்கு அதிக அளவில் வியூஸ்கள் வந்தன. ஒருகட்டத்தில், பிரபலமான யூடியூபர் என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.
கங்காரு
அந்த சமயத்தில்தான், உலக அளவில் பிரபலமான யூடியூபராக வர வேண்டும் என்ற ஆசை ரேமிக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு இதுவரை யாரும் செய்யாத பிராங்கை செய்ய வேண்டுமே.. நண்பர்களுடன் சேர்ந்து யோசித்தார். பல பிராங்க் ஐடியாக்களை நண்பர்கள் கொடுத்தனர். எதுவும் பெரிய அளவில் 'செட்' ஆகவில்லை. அப்போதுதான் அவருக்கு கங்காருவை போல வேடமணிந்து மக்களை பிராங்க் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. நண்பர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, கங்காருவை போல உடையை வாங்கிக் கொண்டு களத்தில் இறங்கினார் ரேமி.
அளவுக்கு மீறிய சேட்டைகள்..
பாரீஸில் உள்ள ஒரு பகுதியில் தனது பிராங்க் சேட்டைகளை செய்ய ஆரம்பித்தார் ரேமி காலியார்ட். அந்த வீடியோவுக்கு வியூஸ்கள் அள்ளவே, உற்சாகமடைந்த ரேமி, முழு நேர கங்காரு மனிதனாகவே மாறினார். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.. ஒரு மாதத்துக்கும் மேலாக பாரீஸில் அவர் கங்காரு உடையை அணிந்து துள்ளி துள்ளி சென்று மக்களிடம் குறும்பு செய்தார். அவர் செய்த சேட்டைகளில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம். ரெஸ்டாரண்டுக்கு வந்து ஆர்டர் செய்தவர்களுக்கு வழங்கப்படும் உணவை தட்டோடு பறித்து வீசி கங்காரு போல துள்ளி துள்ளி ஓடுவது; ஹோட்டலுக்கு சென்று உணவை வாங்கிக் கொண்டு கங்காரு போல துள்ளி குதித்து சென்று அங்கிருப்பவர்கள் மீது அதை கொட்டுவது; நீர்நிலைகளுக்கு அருகே நின்று கொண்டிருப்பவர்களை பின்பகுதியில் மிதித்து தள்ளுவது என இவரது சேட்டைகள் அளவுக்கு மீறி சென்றன.
போலீஸிடம் சிக்கி..
கங்காரு மனிதனின் இந்த அட்டகாசத்தால் பாரீஸ் நகரமே சில நாட்கள் ஸ்தம்பித்து போனது. எங்கிருந்து கங்காரு மனிதன் வருவானோ.. இன்று யாரை என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்தில் மக்கள் உறைந்து போயிருந்தனர். இதுகுறித்து போலீஸிடமும் மக்கள் புகார் அளித்தனர். போலீஸாரும் அவரை தேடினர். ஆனால் போலீஸுக்கு நேக்காக டிமிக்கி கொடுத்து வந்தார் ரேமி. இந்நிலையில், ஒரு நாள் நள்ளிரவு, கங்காரு மனிதனாக மாறிய ரேமி, அங்கிருப்பவர்களிடம் வம்பிழுத்தபடி சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸார் ஒரு இடத்தில் எதேச்சையாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த ரேமி, போலீஸ் என்றும் பாராமல் அங்கிருந்த ஒரு அதிகாரியின் தொப்பியை எடுத்து ஓடினார். அவ்வளவுதான்.. போலீஸார் ஓடிச்சென்று அவரை பிடித்து அடித்து நொறுக்கி நொங்கெடுத்து விட்டனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தது வேறு கதை. இருந்தாலும் போலீஸிடம் வாங்கிய முரட்டு அடியை வாபஸ் பெற முடியுமா என்ன? இப்போது 'பிராங்க்' என்றாலே ரேமிக்கு அந்த அடிதான் நினைவுக்கு வருகிறது.