ஓவர் சத்தம்.. தூங்க முடியல.. கோபத்தில் சகநோயாளியின் வெண்டிலேட்டரை ஆப் செய்த 72 வயது மூதாட்டி!
சக நோயாளியின் வெண்டிலேட்டரை அணைத்து வைத்ததற்காக ஜெர்மனியில் 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெர்லின்: ஜெர்மனி மருத்துவமனை ஒன்றில், தன்னால் நிம்மதியாக ஓய்வெடுக்க இயலவில்லை என சக நோயாளியான மூதாட்டியின் வெண்டிலேட்டரை ஆஃப் செய்த குற்றத்திற்காக மற்றொரு 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான மன்ஹெய்மில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடந்த வாரம் சிகிச்சைக்காக 72 வயது மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரது படுக்கைக்கு அருகில் அவரைப் போலவே உடல்நலமில்லாத 79 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அந்த 79 வயது மூதாட்டிக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்துள்ளனர் மருத்துவர்கள்.

சத்தத்தால் கோபம்
ஆனால் வெண்டிலேட்டரில் இருந்து வந்த சத்தம், 72 வயது மூதாட்டிக்கு பெரும் இடையூறாக இருந்துள்ளது. தான் ஓய்வெடுக்க முடியாதபடி, வெண்டிலேட்டர் சத்தம் இருந்ததால், எரிச்சல் அடைந்துள்ளார் அந்த மூதாட்டி. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், மனிதநேயத்தை மறந்து, எழுந்து சென்று அந்த வெண்டிலேட்டர் சாதனத்தை அணைத்து விட்டார்.

யூகம்
சிறிதுநேரத்தில் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் வெண்டிலேட்டர் அணைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மீண்டும் அதனை இயங்கச் செய்தனர். அந்த அறையில் சம்பந்தப்பட்ட இரண்டு மூதாட்டிகள் மட்டுமே சிகிச்சைப் பெற்று வந்ததால், நிச்சயம் வெண்டிலேட்டரை அந்த 72 வயது மூதாட்டிதான் அணைத்திருப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

திரும்பத் திரும்ப..
எனவே, 79 வயது மூதாட்டிக்கு வெண்டிலேட்டர் தரப்படுவதன் அவசியத்தை பொறுமையாக, எடுத்துக் கூறியுள்ளனர். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட அந்த மூதாட்டி, வெண்டிலேட்டரில் இருந்து வந்த சத்தத்தால் மீண்டும் கோபமடைந்துள்ளார். எனவே, மருத்துவமனை ஊழியர்கள் அந்த அறையில் இருந்து வெளியேறும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மீண்டும் சென்று அந்த வெண்டிலேட்டரை அணைத்து வைத்துள்ளார்.

போலீசில் புகார்
சந்தேகத்தின் பேரில் திரும்பவும் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள், மீண்டும் வெண்டிலேட்டர் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தில்லை
அடிக்கடி வெண்டிலேட்டர் அணைத்து வைக்கப்பட்டதால், 79 வயது மூதாட்டியின் உடல்நிலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அந்த மூதாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தன்னுடைய ஓய்வுக்கு இடையூறாக இருக்கிறதென மற்றொரு நோயாளியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு அம்மூதாட்டி சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications