என் மேல் விழு ஆலங்கட்டியே.. என்னை பிள்ளையை விட்டு விடு.. நெகிழ வைத்த ஆஸி. தாய்!
ஆலங்கட்டி மழையில் இருந்து தன் குழந்தையை அவரது தாய் காப்பாற்றி உள்ளார்.
பிரிஸ்பேன்: "ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?" இந்த தாலாட்டெல்லாம் நம்ம ஊருக்குத்தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த ஆலங்கட்டி மழை ஒரு பெண்மணியை அலற வைத்துள்ளது.
குவின்ஸால்ந்து மாகாணத்தில் நடந்த கதை இது. அங்கே ஃபியோனா சிம்ப்சன் என்ற பெண் தனது குழந்தை, மற்றும் அம்மாவை காரில் உட்கார வைத்து வெளியில் சென்றுகொண்டிருந்தார். குழந்தையை பின்சீட்டில் பத்திரமாக அமர வைத்துக் கொண்டார். அந்த நேரம் பார்த்து திடீரென ஆலங்கட்டி மழை கொட்ட ஆரம்பித்தது. முதலில் சாதாரணமாகத்தான் அந்த மழை பெய்தது.
நொறுங்கிய கண்ணாடி
அதனால் காரை ஃபியோனா தொடர்ந்து ஓட்டி சென்றார். ஆனால் நேரம் ஆக ஆக கடுமையான ஆலங்கட்டி மழை பொழிந்தது. காரை ஃபியோனாவால் ஓட்டவே முடியவில்லை. அதனால் ரொம்பவே பயந்துபோன அவர், வண்டியை ஓரங்கட்டினார். ஆனால் பலமாக கொட்டிய ஆலங்கட்டி மழை கார் கண்ணாடியையும் சுக்குநூறாக உடைத்து போட்டது.
இறுக்கி அணைத்தார்
காரின் கண்ணாடிகள் உடைந்துவிட்டதால் ஆலங்கட்டி நேரிடையாக இவர்கள் மீது விழ தொடங்கியது. பின்சீட்டில் தனியாக இருந்த குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று ஃபியோனா பின்சீட்டுக்கு தாவினார். குழந்தையை கெட்டியாக இறுக்கி அணைத்து கொண்டார். குழந்தையை சுற்றி உடலை கவசம்போல மூடி கொண்டார்.
பத்திரமாக மீட்டார்
எல்லா ஆலங்கட்டியும் ஃபியோனாமேல் வந்து பொத் பொத்தென விழுந்தன. வலியால் துடித்தார் ஃபியோனா. முதுகு, கழுத்து, முகம் என ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஆலங்கட்டி விழுந்து ரத்த காயத்தை ஏற்படுத்தியது. மழை முடியும்வரை குழந்தை மீது ஒரே ஒரு ஆலங்கட்டி துளிக்கூட விழ விடவில்லை ஃபியோனா. மழை நின்ற பிறகு பத்திரமாக வீட்டுக்கு வந்தார்.
வீரத்தாய் ஃபியோனா
உடலில் ஏற்பட்ட காயங்களை ஃபேஸ்புக்கில் புகைப்படங்களாக வெளியிட்டு, இந்த காயத்துக்கு ஏதாவது நல்ல மருந்து இருந்தா சொல்லுங்களேன் என்று கூறி தன் அனுபவத்தையும் பதிவிட்டார்.இதை ஏராளமானோர் பார்த்தும், படித்தும் நெகிழ்ந்து போய்விட்டார்கள். கிட்டத்தட்ட வீரத்தாய் ரேஞ்சுக்கு இவரை ஆஸ்திரேலியா ஊடகங்கள் புகழ்ந்து வருகின்றன.