அப்பாவிகளை விட்டு விடுங்கள்.. கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளரின் தாயார் கண்ணீர்
வாஷிங்டன்: என் மகனைப் போன்றவர்கள் அப்பாவிகள். அவர்களுக்கும் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்களைத் தயவு செய்து கொல்லாதீர்கள். என் மகனைப் போல வேறு யாரையாவது வைத்திருந்தால் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் பாவம் என்று தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலியின் தாயார் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
சிரியாவில் வைத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவர் போலி. குளோபல் போஸ்ட் பத்திரிகைக்காக பணியாற்றி வந்தவர் இவர். இவரை தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொன்று விட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில் போலியின் தாயார் டயான் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பெரும் மன வேதனைக்கு மத்தியில் தீவிரவாதிகளுக்கு அவர் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
மகனுக்காகப் பெருமைப்படுகிறேன்
எனது மகனுக்காக நான் பெருமைப்படுகிறேன். சிரிய மக்கள் படும் சிரமத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் பணியில் எனது மகன் தனது உயிரை இழந்துள்ளான்.
விட்டு விடுங்கள்
இந்த சமயத்தில் நான் கடத்தல்காரர்களுக்கு விடும் கோரிக்கை, அப்பாவி பிணையாளிகளை ஒன்றும் செய்யாதீர்கள். அவர்களை விட்டு விடுங்கள்.
அப்பாவிகள்
எனது மகன் ஜிம் போல அனைத்துப் பிணையாளிகளுமே அப்பாவிகள். அவர்களுக்கும் அமெரிக்க அரசின் கொள்கைளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதில் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. ஈராக், சிரியா, என எந்த நாட்டு விவகாரத்திலும் இவர்களால் அமெரிக்க அரசிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது.
மகிழ்ச்சி தந்த மகனே நன்றி
எங்களுக்கெல்லாம் இத்தனை காலம் மகிழ்ச்சியைக் கொடுத்த எனது மகனுக்கு நான் நன்றி சொல்கிறேன். அவன் அசாதாரணமானவன். நல்ல மகனாக, நல்ல சகோதரனாக, நல்ல பத்திரிகையாளனாக, நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டியவன் என்று டயான் கூறியுள்ளார்.
குளோபல்போஸ்ட்
குளோபல்போஸ்ட் என்ற பத்திரிகைக்காக பணியாற்றி வந்தவர் போலி. கடந்த 2012ம் ஆண்டு வட மேற்கு சிரியாவில், துருக்கி எல்லையையொட்டிய பகுதியிலிருந்து அவர் கடத்தப்பட்டார். துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவரைக் கடத்திச் சென்றனர். அதன் பின்னர் அவர் குறித்த எந்தத் தகவலும் இல்லை.
இன்னொரு அமெரிக்கரின் உயிரும் ஊசல்
இதேபோல இன்னொரு அமெரிக்கரான ஸ்டீவன் சோட்லாப்பும் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளார். அவரது உயிரும் ஊசலாடி வருகிறது.
சிரிய -துருக்கி எல்லையில் கடத்தப்பட்டவர்
இவர் 2013ம் ஆண்டு சிரிய - துருக்கி எல்லைப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டார். இவர் டைம் பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார் பல்வேறு வெளிநாட்டு கொள்கை தொடர்பான இதழ்களுக்கும் எழுதி வந்தவர்.
20 பத்திரிகையாளர்கள் மாயம்
சிரியாவில் இதுவரை 20 பத்திரிகையாளர்கள் மாயமாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் சில அமெரிக்கர்கள்
இதேபோல அமெரிக்கரான ஆஸ்டின் டைஸ் என்ற பத்திரிகையாளரும் தீவிரவாதிகள் பிடிய்ல இருப்பதாக தெரிகிறது. இவரது நிலையும் தற்போது சிக்கலாகியுள்ளது.
டேணியல் பியர்ல் கொலை போல
இப்படித்தான் கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டேணியல் பியர்ல் என்ற பத்திரிகையாளர் பாகிஸ்தானில் வைத்துக் கடத்தப்பட்டார். அவரை பின்னர் அல் கொய்தா தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்று அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டனர். அதேபோல இப்போது அமெரிக்க பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார்.