கனடாவில் வெப்ப அலை.. டெல்லியில் வெயில் கொடுமை.. தமிழகத்தில் மழை பெய்யுமாம்!
டோரன்டோ: கனடாவில் கடும் வெப்ப அலை நீடித்து வருவதால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் தகிப்புக்குள்ளாகியுள்ளது.
மேற்கு கனடிய பிராந்தியம் முழுவதும் மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் பொசுங்கிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வழக்கத்தை விட 8 முதல் 10 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரிதுள்ளது.
தகிக்கும் வெப்பம்
இப்பகுதியில் சராசரியாக 40.5 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறதாம். இதுவரை இந்த மாகாணத்தில் 63 காட்டுத் தீ சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. வடக்குப் பகுதியில்தான் அதிக அளவில் காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
வெப்ப அலை
வான்கூவரில் 32 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் தாண்ட அடிக்கிறது. இங்கும் இந்த வாரத்தில் வெப்ப அலை பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வெயில் கொடுமை..
இதற்கிடையே, இந்தியாவில், டெல்லியில் இன்று காலை முதல் கடும் அனல் வீசி வருகிறது. வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி கூடுதலாக உள்ளது.
தமிழகத்தில் மழை
தமிழகம் மற்றும் புதுவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக் கடலில் ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே நிலையில் உள்ளது.
தென்மேற்குப் பருவமழை
இதனால் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் மழை பெய்யும்.
இதுபோல் தென்மேற்கு பருவமழையின் தாக்கமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் கனமழை
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 130 மி.மீ. மழை பெய்துள்ளது. நடுவட்டம், கூடலூர், தேவலாவில் 90 மி.மீ. மழையும், வால்பாறையில் 70 மி.மீ. மழையும் பெய்துள்ளது. ஊட்டி, பொள்ளாச்சி, கேட்டி ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.