உள்நாட்டில் ஆஸி., அணி சந்தித்த மாபெரும் தலைகுனிவு - திருந்துவார்களா ரசிகர்கள்?
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்று கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்நாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று, சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்துள்ளது இந்திய அணி.
Some want it to happen,
Some wish it would happen,
Others make it happen.
என்று கிரிக்கெட் பழமொழிகளில் ஒரு புகழ்மிக்க, வலிமையான கன்டென்ட் உள்ளது. இன்று அந்த கன்டென்ட் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆம்! அவர்கள் வென்றுவிட்டார்கள்.
எந்த மண்ணில், எந்த வலிமையான அணிக்கு எதிராக வெல்லவே முடியாது என்ற சூளுரைத்தார்களோ, அதே மண்ணில் அதே சூளுரைகள் சூழ் களத்தில் அந்த அணியை வென்றுவிட்டார்கள். அதுவும் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ஸ்மித், அதிரடி வார்னர், அசந்தால் ஆளை காலி செய்யும் பந்துவீச்சு என்று மிரட்டிய ஆஸ்திரேலிய அணியை, கிட்டத்தட்ட இரண்டாம் நிலை வீரர்களை வைத்து காலி செய்திருக்கிறது ரஹானே தலைமையிலான இந்திய அணி.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களில் சுருண்ட இந்திய அணி, அதே டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றும் என்று எவராவது நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?
மீண்டும் சொல்கிறேன், ஆம்! அவர்கள் வென்றுவிட்டார்கள், நம் இதயத்தையும் வென்றுவிட்டார்கள்!.
முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு, சொந்த காரணங்களுக்காக கேப்டன் விராட் கோலி நாடு திரும்பிய பிறகு, 'இந்திய அணி அவ்வளவு தான்' என்று சபதம் செய்தனர் முன்னாள் ஆஸ்திரேலிய சாதனையாளர்கள்.
ஆனால், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அணியை வெற்றிப் பெற வைத்து தொடரை சமன் செய்து, விமர்சனங்களுக்கும் சரியான பதிலடி கொடுத்தார் 'சைலண்ட் கில்லர்' கம் கேப்டன் ரஹானே.
தொடர்ந்து, சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தோல்வியின் பிடியில் சிக்கிய இந்திய அணியை ஹனுமா விஹாரி - அஷ்வின் பார்ட்னர்ஷிப், யாருமே நம்ப முடியாத ஒரு கொடூரமான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து, ஆஸி., அணியின் ஷார்ட் பால், பெளன்ஸர், பாடி லைன் அட்டாக் என அனைத்து அட்டாக்குகளையும் கூட இந்தியா சமாளித்துவிட்டது.
ஆனால், அந்நாட்டு ரசிகர்கள் சிலர், இந்திய வீரர்கள் மீது நடத்திய இனவெறித் தாக்குதல் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனினும், போட்டியை டிரா செய்து அன்றே ஆஸ்திரேலியர்களுக்கு தூக்கமில்லா இரவை பரிசளித்தது இந்தியா.
அந்த வெப்பம், 'See You at Gabba' என்று ஆஸி., கேப்டன் டிம் பெய்னை ஆக்ரோஷத்துடன் சொல்ல வைத்தது. ஏனெனில், பிரிஸ்பேனின் Gabba ஸ்டேடியம் ஆஸ்திரேலியாவின் எஃகு கோட்டையாக கொடி நாட்டி வந்தது. அங்கு அந்த அணியை உலகின் வேறு எந்த அணியாலும் அசைத்துப் பார்க்க முடியாது.
அதேசமயம், காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஹனுமா விஹாரியும், அஷ்வினும் விலக, கிட்டத்தட்ட ஒரு இரண்டாம் நிலை அணியை இறுதி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனாக அறிவித்தது டீம் இந்தியா.
முதல் இன்னிங்ஸில் ஆஸி., 369 ரன்கள் எடுக்க, 186-க்கு 6 விக்கெட் என்று தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை மீட்டது வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாகூர் பார்ட்னர்ஷிப். 7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 123 ரன்கள் சேர்க்க, 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுக்க, இந்தியாவுக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படியே 90'ஸ் கிட்ஸ்-களிடம் இந்த டார்கெட்டை சொல்லிப் பாருங்கள். ஆஸ்திரேலிய மண்ணில், அந்த அணிக்கு எதிராக இந்த டார்கெட் சாத்தியமே இல்லை என்று சத்தியம் செய்திருப்பார்கள்.
அது எதார்த்தமான பதிலும் கூடத் தான்.
ஏனெனில், சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன், ஷேவாக் போன்ற ஜாம்பவான்கள் இருந்த போதே, ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை விடுங்க... ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதே பெருங்கனவாக தான் இருந்தது.
தோனி வந்த பிறகு, ஒருநாள், டி20 தொடர்களில் அங்கு ஆதிக்கம் செலுத்த முடிந்ததே தவிர, அப்போதும் டெஸ்ட் தொடரில் நம்மால் தொடையைத் தட்டி வெற்றியைக் கொண்டாட முடியவில்லை.
ஆனால், தற்போது கோலி Era அதனை நிகழ்த்தி காட்டியிருக்கிறது.
ஷுப்மன் கில்-ன் நேர்த்தி, புஜாராவின் இரும்புக் கோட்டை, ரிஷப் பண்ட்டின் 'இப்ப வாங்கடா' மோட் ஆட்டத்தினால், கற்பனை செய்ய முடியாத வெற்றியை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறது டீம் இந்தியா.
ஆம்! ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வைத்து சல்லி சல்லியாக நொறுக்கி இருக்கிறோம். இதுதான் உண்மை!.
இந்திய வீரர்களை ஆஸி., வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்வது இயல்பு தான் என்றாலும், அதுவே பலமுறை எல்லை மீறியிருக்கிறது. ஆனால், அதை ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷ அணுகுமுறை என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுவார்கள்.
ஆஸி., வீரர்களே எட்டடி பாய்ந்தால், அந்நாட்டு ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் 16 அடி பாய்ந்து இந்திய வீரர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தி, அவர்களை மனரீதியாக நிலைகுலைய வைக்க முயற்சித்தனர்.
இப்போது, ஒன்னும் இல்லாமல் போய், திருடனுக்கு தேள் கொட்டின கதையாக, சப்த நாடியும் அடங்கி இருக்கிற திசையே தெரியாமல் போய்விட்டனர்.
இப்போது முதல் பத்தியில் சொன்ன வாக்கியத்தை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், ஆனால் வேறு மாதிரியாக,
Some want it to happen - இது கங்குலி காலக்கட்டம்
Some wish it would happen - தோனி காலக்கட்டம்
Others make it happen - இது கோலி, ரஹானே காலக்கட்டம்.
இனியாவது திருந்துவார்களா என்று பார்ப்போம்!