எச்ஐவி வைரசின் வீரியம் குறைந்து வருகிறது.. எய்ட்ஸ் பரவலும் குறைகிறது: ஆய்வில் மகிழ்ச்சி தகவல்
லண்டன்: எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்ஐவி வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எய்ட்ஸ் என்னும் உயிர் கொல்லி நோயை எச்ஐவி என்ற வைரஸ் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்காவிலுள்ள எய்ட்ஸ் பாதித்த 2 ஆயிரம் பெண்களிடம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வுக்குழு சார்பில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், எச்ஐவி வைரசின் வீரியம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் அதிகப்படியான மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அதை தாங்கிக்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்து வருவதற்கு, வைரசின் வீரியம் குறைந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
மரபு ரீதியாக நோயை எதிர்கொள்ளும் சக்தியை அம்மக்கள் பெற்றிருப்பதுடன், இயல்பாகவே நோயை தாங்கும் சக்தியையும் உடல் பெறத்தொடங்கியுள்ளதன் விளைவாக எச்ஐவி கிருமி பலமிழக்க தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே எச்ஐவி கிருமி தொற்றிக்கொண்டவர்கள் கூட எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க வருங்காலத்தில் வழி பிறக்கும் என்று கூறப்படுகிறது.
'ஒரு முடிவின் தொடக்கம்' என்று விஞ்ஞானிகள் இந்த மாற்றத்தை வர்ணிக்கின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் புதிதாக எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதும், எச்ஐவி கிருமியின் ஆதிக்கம் குறைந்துவிட்டதற்கான அறிகுறியாக விஞ்ஞானிகள் பார்க்கின்றனர்.
30 வருடங்களாக மனித உலகை ஆட்டிப்படைத்து வரும் எய்ட்ஸ் நோயை படிப்படியாக ஒழித்துக் கட்ட பாதை தெரியத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.