இதுக்கு ஒரு முடிவே இல்லையா! ஹாங்காங்கை மீண்டும் அலறவிடும் கொரோனா.. 2 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு
ஹாங்காங்: கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஹாங்காங்கில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே நம்மை அலற விட்டுக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்க நாடுகள் வரை அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமான பாதிப்பை எதிர் கொண்டுள்ளது.
கடலூரை தொடர்ந்து.. ஆரணி பேரூராட்சியில் 3 பெண் கவுன்சிலர்கள் கடத்தல்.. குழந்தையுடன் கணவர் தர்ணா
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் மறுபுறம் உலக நாடுகளை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதில் இரு்நது மீண்டு வருவதே உலக நாடுகளுக்கு பெரிய சிக்கலாக உள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரசை உலக நாடுகள் இரு வேறு வகையில் கையாள்கின்றன. பெரும்பாலான உலக நாடுகள் கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டன. இருப்பினும், சீனா, ஹாங்காங் போன்ற சில நாடுகள் மட்டுமே ஜீரோ கோவிட் என்ற கொள்கையுடன் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜீரோ கோவிட் கொள்கையை ஹாங்காங் கடைப்பிடிப்பதால், இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையும் ஹாங்காங் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
வெளியேறும் மக்கள்
ஹாங்காங் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரியில் மட்டும் அங்கிருந்து 71,000க்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளனர். கொரோனா தொடங்கியதில் இருந்து அங்கு அதிக நபர்கள் வெளியேறியது இந்த பிப். மாதம் தான். இப்படி வெளியேறும் பல நபர்களும் ஹாங்காங்கில் பல ஆண்டுகள் கழித்தவர்கள். இருப்பினும், ஹாங்காங் தொடர்ந்து விதித்து வரும் கட்டுப்பாடுகள் காரணமாகவே அங்கிருந்து வெளியேறும் முடிவைப் பலரும் எடுத்து வருகின்றனர்.
ஹாங்காங் அரசு
அதிலும் ஒவ்வொரு சில நாட்களுக்கு ஒருமுறை ஹாங்காங் அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது. இதனால் அதை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கே சில சமயங்கள் குழப்பம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் போது, அவர்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர். அந்நகரில் இருந்து மக்கள் வெளியேற இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
தினசரி பாதிப்பு
அதேபோல உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தனை கட்டுப்பாடுகளை விதித்தும் கூட அங்கு கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கடந்த 2021இல் கடை மூன்று மாதத்தில் அங்கு ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தான் இருந்தது. ஆனால், இப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 60 ஆயிரம் வரை அங்கே சென்றுள்ளது. இதனால் ஹாங்காங்வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள்
கொரோனா பொருந்தொற்று தொடங்கியது முதலே ஹாங்காங் நாட்டில் இதுவரை 3.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல இதுவரை அங்கு 1400 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 நாடுகளில் இருந்து சீனாவுக்கு விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஹாங்காங் திரும்ப விரும்பும் மக்களால் கூட திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகள்
மேலும், கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கூட அவர்களுக்கு இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் பிபிஇ கிட் உட்பட எந்தவொரு முறையான உபகரணங்களும் இல்லாமல் வயதானவர்கள் உட்பட அனைத்து நோயாளிகள் மருத்துவமனைக்கு முன்பு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.