மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஹாங்காங்கில் 2 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பு! இது தான் காரணம்
ஹாங்காங்: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இப்போது தான் குறைந்து வரும் நிலையில், ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளிடையே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு நாட்டினாலும் கொரோனா வைரசை முழுமையாக அழிக்க முடியவில்லை.
உ.பி. 3-ம் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது- 135 கிரிமினல் வேட்பாளர்கள்!
மேலும், கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதும் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலைக் கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பைச் சிறப்பாகக் கையாண்ட சீனா கூட, இந்த முறை திணறி வருகிறது.
ஹாங்காங்
சீனா ஆளுகைக்கு உட்பட தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் இப்போது மிக மோசமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென அங்கு மீண்டும் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கி வருகின்றனர். பல மாதங்களாக ஜீரோ-கோவிட் திட்டத்தைச் செயல்படுத்தி வந்த ஹாங்காங் இப்போது பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
ஓமிக்ரான்
அங்கு ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே மிக மோசமான பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வேக்சின் போடாத மக்களிடையே வைரஸ் பாதிப்பு மின்னல் வேகமாகப் பரவி வருவதால் அதிகாரிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் திணறி வருகின்றனர். கடந்த டிச. இறுதியில் அங்கு ஓமிக்ரான் முதலில் கண்டறியப்பட்ட உடன் விமான தடை, பொது இடங்களில் கூட்டமாகக் கூட தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தாலும் அவை பெரியளவில் பலன் தரவில்லை.
மிக அதிகம்
ஓமிக்ரான் பரவ தொடங்கிய பின்னர் கடந்த 2 மாதங்களில் மட்டும் அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து ஹாங்காங்கில் 12,000 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா அலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹாங்காங் தலைவர் கேரி லாம், வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் இடமில்லை
இதுநாள் வரை அறிகுறி அற்ற லேசான பாதிப்பைக் கொண்ட கொரோனா நோயாளிகளும் கூட மருத்துவமனைகளில் அட்மிட் ஆக வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், லேசான பாதிப்பு உடையவர்கள் வீடுகளிலேயே இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட கடந்த புதன்கிழமை மட்டும் சுமார் 10,000 பேர் கொரோனா படுக்கைக்குக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
மாபெரும் மருத்துவமனைகள்
கொரோனா நோயாளிகள் பிபிஇ கிட் உட்பட எந்தவொரு முறையான உபகரணங்களும் இல்லாமல் வயதானவர்கள் உட்பட அனைத்து நோயாளிகள் மருத்துவமனைக்கு முன்பு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இப்படி இருப்பதன் மூலம் கூட பலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த ஹாங்காங் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா மருத்துவமனைகளைக் கட்டுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
என்ன முடிவு
அதேபோல ஹாங்காங் நகரில் உள்ள அனைத்து 75 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வைரஸ் பாதிப்பைத் தடுக்க தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ள ஹாங்காங் தலைவர் கேரி லாம், அதே நேரம் முழு லாக்டவுன் விதிக்கும் எண்ணம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும், சீனாவைப் போலவே ஹாங்காங்கிலும் ஜீரோ கோவிட் திட்டம் பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டார்.
காரணம்
ஹாங்காங் பகுதியில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கக் குறைந்த வேக்சின் பணிகளே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் குறைந்த வேக்சின் சதவிகிதத்தைக் கொண்ட நகராக ஹாங்காங் உள்ளது. அங்கு 70-79 வயதானவர்களில் 43 சதவீதம் பேருக்கும் 80 வயதைக் கடந்தவர்களில் 27 சதவீதம் பேருக்கும் மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. வேக்சின் பணிகளை அதிகப்படுத்த ஹாங்காங் நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது தான், இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்ற விமர்சனம் அதிகரித்துள்ளது.