தீவிரவாதி லக்வியை தடுப்புக் காவலில் வைத்தது செல்லாது: பாகிஸ்தான் கோர்ட்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய தளபதியாக செயல்பட்ட ஷகி உர் ரக்மான் லக்வியை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய தளபதியாக செயல்பட்ட ஷகி உர் ரக்மான் லக்வி மீது பாகிஸ்தானில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த வழக்கில் லக்விக்கு எதிராக போதுமான சாட்சியம் இல்லாததால் அண்மையில் ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பு உத்தரவின் கீழ் லக்வியை உடனே தடுப்புக்காவலில் வைத்தது பாகிஸ்தான் அரசு.
ஆனால் தம்மை தடுப்புக் காவலில் வைத்ததை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த 26-ந் தேதி லக்வி மேல்முறையீடு செய்தான். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், லக்வியைத் தடுப்புக் காவலில் வைத்ததற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே லக்வியை மற்றொரு வழக்கில் தடுப்புக் காவலில் வைக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.