"முகத்தை காட்டுங்க ஸார்.. தாடி எங்கே.. வேலையை விட்டு கிளம்புங்க.." தாலிபான்களின் புது உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது, பாரம்பரிய உடையான நீண்ட தளர்வான சட்டை, பேண்ட் அணிந்து, தொப்பி அல்லது டர்பன் அணிய வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதை மீறுபவர்களின் அரசு பணி பறிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து உள்நாட்டு போரில் தாலிபான்கள் 2021 ஆகஸ்டில் ஆப்கனை கைப்பற்றினர்.
தற்போது ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போர் மூலம் ஆட்சியை கைப்பற்றியதால் தாலிபான்கள் ஆட்சியை உலக நாடுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆப்கனில் பொருளாதார நெருக்கடி நிலவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர் கட்டுப்பாடுகள்
இது ஒருபுறம் இருக்க ஆப்கனில் தாலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது, மாணவிகளுக்கு உயர்நிலை பள்ளிகளில் அனுமதி மறுப்பு, தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன.

கடந்தவார கட்டுப்பாடுகள்
இந்நிலையில் கடந்த வாரம் 7 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அன்றையே தினமே அவர்கள் மீண்டும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதன்பிறகு தொடர்ந்து அவர்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்களிலும் ஆண், பெண்கள் தனித்தனியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாரத்தின் 3 நாட்கள் பெண்களுக்கும், வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் ஆண்களும் பூங்காக்களுக்கு செல்லலாம். திருமணமான தம்பதிகள் ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து செல்ல முடியாது.

தாடியுடன் பணி
இந்த வரிசையில் தற்போது அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தாடியை ஷேவ் செய்ய கூடாது. அவர்கள் தாடியுடன், நீண்ட தளர்வான சட்டை, பேண்ட்டுடன் (பைஜாமா, ஜிப்பா) முஸ்லிம்களுக்கான தொப்பி, டர்பன் அணிந்து பணி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான நேரத்தில் தொழுகை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பணி பறிப்பு
இதை நல்லொழுக்க பரப்பல் அமைச்சகத்தின் பிரதிநிதிகள் அரசு அலுவலக நுழைவு வாயில்களில் நின்று கண்காணித்து வருகின்றனர். இதை பின்பற்றாதவர்களுக்கு அரசு அலுவலகங்களுக்குள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் அவர்களின் பணியும் பறிக்கப்படும் நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விளக்கம்
ஆப்கனில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகளில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருவதால் சமீபத்தில் தாலிபான்கள் விளக்கம் ஒன்றை அளித்து இருந்தனர். அதில், ‛‛இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப பொதுமக்களின் அனைத்து உரிமைகளுக்கும் மதிப்பளித்து வருகிறோம்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications