இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை. ஐநா அறிக்கை
ஜெனிவா : இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) சட்டம் 2021, சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்று ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மின்னணு உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதற்காக டிஜிட்டல் செய்தி தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான மூன்று அடுக்கு குறை தீர்க்கும் கட்டமைப்பையும் நெறிமுறைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.
இந்த புதிய விதிமுறைகள் சமூக ஊடக பயன்பாட்டாளர்களுக்கு அதிகாரம் கொடுப்பதாக அமையுமென்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021 என்ற வழிகாட்டுதல்களின்படி, முதல் முறையாக மின்னணு ஊடக நிறுவனங்கள், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் எப்படி செயல்பட வேண்டுமென்ற வரைமுறையை மத்திய அரசு வகுத்தது.
'தொடங்கியது'.. டிஜிட்டல் வடிவில் கோவில் ஆவணங்கள்! சொன்னபடி செய்த அமைச்சர் சேகர் பாபு!
விளக்கம் அவசியம்
இதன்படி இந்தியாவை தளமாகக் கொண்ட இணக்க அதிகாரிகளை சமூக ஊடக நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். ஒரு பயனரின் உள்ளடக்கத்தை அகற்றினால், அதற்கான காரணத்தை அவர்களிடம் தெரிவிப்பதுடன், அவர்களின் விளக்கத்தையும் கேட்க வேண்டியது அவசியம் ஆகும்.
சிறை தண்டனை
தவறான தகவலை "முதலில் வெளியிட்டவரின்" விவரங்களை சமூக ஊடக நிறுவனங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தீங்கிழைக்கும் தகவலை பகிர்வோருக்கும் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். பல்வேறு நிறுவனங்களின் செயலாக்கத்தை கண்காணிக்கும் குழுவில், பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள், உள்துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர். நெறிமுறைகளை மீறியதாக புகார்கள் மீதான விசாரணையை தானே முன்வந்து நடத்தும் அதிகாரம் இந்த குழுவுக்கு உண்டு.
தடைவிதிக்க முடியும்
இணை செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை "அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி" என்று அரசாங்கம் நியமிக்கும். அவர் உள்ளடக்கத்தைத் தடைவிதிக்க உத்தரவிட முடியும். அதேபோன்று, ஒரு உள்ளடக்கம் சட்டத்தை மீறுவதாக ஒரு மேல்முறையீட்டு அமைப்பு கருதினால், அந்த உள்ளடக்கத்தை தடைசெய்ய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.
இணையதளங்கள்
ஓடிடி தளங்கள், அவை திரையிடும் படங்கள் தொடர்பான பார்வையாளர் காணும் நெறிகளை U (யூனிவெர்சல்), U/A 7+, U/A 13+, U/A 16+, and A (பெரியவர் மட்டும்) என சுயமாக அறிவிக்கும் எழுத்துகளை இடம்பெறச்செய்ய வேண்டும். இதன் மூலம், சிறுவர்களுக்காக உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை தவிர்த்து மற்றவற்றை அவர்கள் அணுகுவது தடுக்கப்பட வேண்டும். மின்னணு செய்தி ஊடகங்கள் இந்திய பிரஸ் கவுன்சிலின் விதிகளைப் பின்பற்றும். புதிய இணையதளங்கள் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அவதூறான, ஆபாசமான, இனவெறி மற்றும் சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடக உள்ளடக்கங்கள் மற்றும் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிற நாடுகளுடனான அதன் உறவுகளை அச்சுறுத்தும் உள்ளடக்கங்களை இந்த விதிகள் தடைசெய்கின்றன. தகவல் தெரிவிக்கப்பட்ட அல்லது நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் அவதூறான அல்லது சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் அல்லது முடக்க வேண்டும்.
சட்டவிரோத கருத்துக்கள்
புகார்களைப் பெற, ஒப்புக் கொள்ள மற்றும் தீர்க்க நிறுவனங்கள் ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை ஒரு மாதத்திற்குள் நியமிக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களும் குறை தீர்க்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். புகாரின் 24 மணி நேரத்திற்குள், சட்டவிரோதமான அல்லது புண்படுத்தும் வகையிலான உள்ளடக்கத்திற்கான அணுகலை அகற்ற வேண்டும் அல்லது முடக்க வேண்டும். மின்னணு ஊடகங்கள், அவற்றுக்கு வரும் புகார்கள் தொடர்பான குறைதீர் நடவடிக்கைக்காக மூன்று கட்ட சுய நடைமுறையை கொண்டிருக்க வேண்டும். முதல் நிலையில் பதிப்பாளர், இரண்டாம் நிலையில் சுய ஒழுங்குமுறை அமைப்பு, மூன்றாம் நிலையில் இந்திய அரசின் மேற்பார்வைக்குழு என அந்த வசதிகள் இருக்க வேண்டும் இவ்வாறு சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
ஐனநாயகம்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இச்சட்டம் சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்று இந்திய அரசுக்கு அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். இந்தியாவில் உள்ள பல கட்சி ஜனநாயகம், ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது நியாயமாக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கட்டுப்பாடுகளை ஒரு போதும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளனர்.
ஆலோசனை வேண்டும்
கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் மற்றும் தனியுரிமைக்கான சிறப்பு அறிக்கையாளர் ஆகியோர் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.. இந்த சட்டம் இந்தியாவின் சர்வதேச சட்டங்களுடன் ஒத்துப்போகும்" என்பதை உறுதிப்படுத்த இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியம் என்று கூறியுள்ளனர்.
இறுதி வடிவம்
தங்கள் கடிதத்தில் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் முன்னணியில் வைக்கக்கூடிய ஒரு சட்டத்தை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றும் எனினும் இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின் இறுதி வடிவம் குறித்து, மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், தனியுரிமை உரிமைகள் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ஆகியவற்றைக் கையாளும் சிவில் சமூகம் உட்பட அனைத்து தொடர்புடைய அனைவரையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை நாங்கள் ஊக்குவிப்போம்" என்று அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.