சீனாவைப் பின்னுக்குத் தள்ளும் இந்தியா... 2026-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்!
இந்தியாவின் மக்கள் தொகை 2 மில்லியன் உயர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 150 கோடியாக மாறும் என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் உலகில் அதிக மக்கள் தொகை நாடுகளில் முதலாவது இடத்தைப் பிடிக்கும் என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா மக்கள் தொகையில் உலகில் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை 130 கோடி. சீனா மக்கள் தொகையில் முதலாவது இடத்தில் உள்ளது.
ஆனால், இன்னும் பத்தாண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கும் என ஐநா மற்றும் 'ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் குரோத் அண்ட் டெவலப்மெண்ட்' என்கிற அமைப்பு இணைந்து தெரிவித்துள்ளது.
பத்தாண்டுகளில் எகிறும் மக்கள் தொகை
தற்போது உலகின் மொத்த மக்கள் தொகை 730 கோடி. இந்த மக்கள் தொகை 2026ஆம் ஆண்டில் 820 கோடியாக இருக்கும் என்று ஐநாவும் ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் குரோத் அண்ட் டெவலப்மெண்ட் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. அதுவும் உலகின் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதம் மக்கள் தொகை இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பின் தங்கும் சீனா..முதல்படியில் இந்தியா
இந்திய மக்கள் தொகை தற்போது 130 கோடியாக உள்ளது. அடுத்த 2016ஆவது ஆண்டில் 150 கோடியாக உயர்ந்துவிடும் என ஐநா தெரிவித்துள்ளது. இதனால் முதலிடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவின் நிலவரம்
சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 138 கோடியாக உள்ளது. அதிலும் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் 55 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மக்கள் தொகை 2030ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இளமையான இந்தியா
இந்தியா தற்போது மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருப்பினும், அதிகமான மக்கள் இளமையானவர்களாக இருப்பதால் இந்தியாவின் பெரும் பலமே மனிதவளம் தான் என்கின்றன உலக அமைப்புகள். அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 20 கோடி அதிகரித்தாலும், அப்போதும் இந்தியா இளமையான நாடு என்பதுதான் சிறப்பு.
உணவுக்கு அச்சமில்லை
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ந்தால் அனைவருக்கும் உணவு எப்படி என்று அச்சப்பட வேண்டாம். பால் உற்பத்தியில் உலகின் முன்னணி உற்பத்தியாளராக விளங்கும் என்றும், அதாவது 49% பால் உற்பத்தி அதிகரிக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. பால் மட்டுமில்லாது கோதுமை உற்பத்தி அடுத்த பத்தாண்டுகளில் 11% அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அடிப்படை வசதிகள்?
அடுத்த பத்தாண்டுகளில் 2 மில்லியன் மக்கள் அதிகரித்தால் இருப்பிடம், குடிநீர், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைகள் தேவைகள் குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் உயரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அரசு இப்போதே திட்டமிடுவது அவசியம் என அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.