காதல் தகராறு: அமெரிக்காவில் பள்ளித் தோழனைக் கொன்ற இந்திய வம்சாவளி மாணவன் கைது
வாஷிங்டன்: காதலியோடு சேர்ந்து தன்னை ஏமாற்றிய பள்ளித் தோழனை கத்தியால் குத்திக் கொலை செய்த பயோ மெடிக்கல் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவனை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன் நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளி வாலிபரான 24 வயது ராகுல் குப்தா, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 'பயோமெடிக்கல்' படித்து வரும் மாணவர்.
கடந்த ஞாயிறன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தனது நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார் ராகுல். அப்போது அவர்களது வீட்டில் இருந்து அதிக சப்தம் கேட்பதாக சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்துள்ளார் அருகாமையில் வசிக்கும் பெண் ஒருவர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராகுலின் வீட்டில் கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்த சடலத்தைக் கைப்பற்றியதோடு, ராகுலையும் கைது செய்தனர்.
ராகுலிடம் நடத்தப் பட்ட விசாரணையில், ‘கொலை செய்யப்பட்ட மார்க் எட்வர்ட் வாக் என்பவன் தன்னுடன் விர்ஜினியாவில் உள்ள லேங்லி பள்ளியில் ஒன்றாக படித்தவன் என்றும் தனது காதலியும் அவனும் சேர்ந்து தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளான்.
விருந்துக்கு வந்த இடத்தில் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் தன்னை வாக் கத்தியால் குத்த வந்ததாகவும், அந்த கத்தியை பறித்து அவனை குத்திக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான் ராகுல்.
கைது செய்யப்பட்ட ராகுலுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்து விட்டது.












Click it and Unblock the Notifications