அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம சாவு: 7 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரும் சுட்டுக் கொலை
பிலடெல்பியா: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் தனது அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் பிலடெல்பியாவில் உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்தவர் இந்தியா வம்சாவளி மாணவர் புல்கித் சிங்(20). அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் தனது அறையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி அப்போது 13 வயதான புல்கித் தனது 12 வயது தம்பி அங்கூர் சிங்குடன் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சகோதரர்கள் தங்கள் பெற்றோர் ஜஸ்பல்(46) மற்றும் கீதா(38) சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நியூயார்க்கின் நசாவ் கவுன்ட்டியில் உள்ள சியோசெட் என்ற இடத்தில் நடந்தது.
கடந்த 2011ம் ஆண்டு புல்கித் தி நியூயார்க் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தனது பெற்றோரை கொன்ற நபர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தெரிவித்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரரான புல்கித் வார்ட்ன் தவிர ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங் அன்ட் அப்ளைட் சயன்சஸில் வேறு படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.