ஈராக்கில் சிக்கியுள்ள 6 தமிழக நர்ஸ்கள்: மீட்க அரசுக்கு கோரிக்கை!
பாக்தாத்: ஈராக்கில் சிக்கித் தவிக்கும் 6தமிழக செவிலியர்களை மீட்டுத் தரக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். ஈராக்கின் மோசூல், திக்ரித், சாதியா, ஜலாலா உள்ளிட்ட நகரங்களைக் கைபற்றியுள்ள அவர்கள், தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். பாக்தாத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவத்துடன் கடுமையாக சண்டையிட்டு, ஒவ்வொரு நகரையும் தங்கள் வசப்படுத்தி வருகின்றனர்.
பாக்தாத்தை நெருங்கினர்
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல இடங்களில் ராணுவ வீரர்கள் பின்வாங்கி வருகின்றனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறும் கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு முக்கியமான நகரையும் கைப்பற்றியுள்ளனர்.
46 இந்திய செவிலியர்கள்
இந்நிலையில், திக்ரிக் நகரில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய செவிலியர்கள் 46 பேரை சர்வதேச செம்பிறை அமைப்பின் உதவியோடு தொடர்பு கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஈராக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய செவிலியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கூடலூர் செவிலியர்கள்
இந்நிலையில், தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டம், தர்மகிரி கிராமத்தைச் சேர்ந்த செவிலியர்கள் 6 பேர் ஈராக்கில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை பத்திரமாக மீட்டுத்தரக் கோரியும், அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திங்கட்கிழமை பேசினர்
நமீதா மேத்யூ என்ற நர்ஸ், திங்கட்கிழமையன்று இரவு 9.30 மணிக்கு தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சினிவில்சன், சிலி போஸ், நீலு தாமஸ் ஆகியோஸ் பாக்தாத் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருப்பதாக தனது தந்தையிடம் தெரிவித்து உள்ளார்.
தொடர்பு துண்டிப்பு
அதேபோல தர்மகிரியில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலிவயல் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோரிகளும் ஈராக்கில் செவிலியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
திங்கட்கிழமை பேசிய பிறகு அங்கு பணிபுரியும் யாரும் உறவினர்களை தொடர்பு கொள்ள வில்லை என தெரிகிறது. இதனால் அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மீட்க வலியுறுத்தல்
அனைவரின் செல்போன் தொடர்பும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். எனவே அவர்களை மீட்டுத்தரக்கோரி அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
நாடு திரும்ப விருப்பம்
இந்த நிலையில், அங்கு இருக்கும் 46 நர்ஸ்களில், 11 பேர் இந்தியா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 22 பேர் ஈராக்கிலேயே இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். செஞ்சிலுவை அமைப்பினர், இந்திய நர்ஸ்களிடம் இதுகுறித்த கலந்தாய்வை நடத்தி உள்ளனர்.