அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டாக்டர் குத்திக்கொலை.. நோயாளி வெறிச்செயல்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டி அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அவரிடம் சிகிச்சை பெற்று மனநலம் தேறியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் நலகொண்டா மாவட்டம் மிர்யாலகுடாவைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவரான அச்சுதா ரெட்டி அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை தொடர்பாக விசிட்டா போலீஸ் சந்தேகத்தின் பேரில் 21 வயது இளைஞர் உமர் ரஷித் தத்தை கைது செய்து செட்ஜ்விச் கவுண்ட்டி சிறையில் அடைத்துள்ளனர். கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

மருத்துவர் படுகொலை குறித்து கூறியுள்ள விசிட்டா போலீசார், புதன்கிழமை மாலை 7.22 மணியளவில் ஹோலிஸ்டிக் மனநல சேவை மையத்தின் மேலாளர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை குறித்து தெரிவித்தார். கொலை நடந்த சில நிமிடங்களில் விசிட்டா கவுன்ட்டி கிளப்பின் பாதுகாவல் ஒருவர் எங்களைத் தொடர்பு கொண்டு இங்குள்ள பூங்காப் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருப்பதாக தெரிவித்தார்.
கொலை குறித்து சாட்சியம் கூறியுள்ள மருத்துவமனையில் மேலாளர் டாக்டர் அச்சுதா ரெட்டியை மர்ம நபர் ஒருவர் தாக்கியதாகக் கூறினார். டாக்டர் அந்தக் கொலையாளியிடம் இருந்து தப்பிக்க கிளின்க்கில் இருந்து வெளியே ஓடியுள்ளார் ஆனால் அவன் கொடூரமாக தாக்கியதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் டாக்டர் அச்சுதா மருத்துவமனையின் பின்புறத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.
டாக்டர் அச்சுதா ரெட்டி கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அவரிடம் சிகிச்சை பெற்று மனநலம் தேறிய பலர் அதிர்ச்சியும், ஆதங்கமும் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இதற்கான இரங்கல் தெரிவித்துள்ள அவர்கள், அச்சுதா ரெட்டி ஒரு மருத்துவர் போல இல்லாமல் நண்பர் போல இருந்து கடினமான நேரங்களில் மன உறுதியைத் தந்தவர் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
அச்சுதா ரெட்டி உஸ்மானியா மருத்துவ கல்லூரியில் 1986ல் மனநல மருத்துவம் பயின்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்டர்நல் மெடிசின் தொடர்பாக புனித லூயிஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளனார். இதே போன்று அமெரிக்காவின் மன நலம் மற்றும் நியூராலஜி துறையின் கீழ் மனநல சிகிச்சைக்கான சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications