அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை - வீடியோ வெளியிட்டு போலீஸ் விசாரணை
அமெரிக்காவில் இதிய மாணவர் சரத் கோப்பு துப்பாக்கியால் சுட்டுகொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டு கன்சாஸ் போலீஸ் விசாரணை நடத்துகிறது.
சரத் கோப்பு தெலங்கான மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான சரத் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மிசௌரி பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் படித்து வந்துள்ளார். இவருடைய தந்தை ராம்மோகன் பி.எஸ்.என்.எல். ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்காவில் படித்துவந்த மாணவர் சரத் கன்சாஸில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை உணவு விடுதிக்குள் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டபோது சரத் அந்த மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடந்த மாணவர் சரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்திய மாணவர் சரத் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வீடியோவைப் பார்த்த, ஜேஸ் மீன் மற்றும் கோழிக்கறி கடை நடத்தும் சஹீத் கூறுகையில், "வெள்ளிக்கிழமை மாலை ரெஸ்டாரண்ட்டில் 5 பேர் வேலை செய்துகொண்டிருந்தோம். அப்பொது சந்தேகப்படும்படியான ஒரு நபர் நடந்துசென்றார்.
அந்த நபர் அவருக்கு முன்னால் நின்ற வாடிக்கையாளரைத் தள்ளினார் பின்னர், மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தார். அப்போது அங்கே இருந்த மற்றவர்கள் எல்லாம் கவுண்ட்டர் பக்கம் பதுங்கிக்கொண்டார்கள். ஆனால் சரத் எதிர் திசையில் வெளியே ஓடினார். இதைப் பார்த்த அந்த துப்பாக்கி மனிதனால் சரத் பின்புறமாக சுடப்பட்டு கிழே விழுந்தார்." என்று தெரிவித்தார்.
இந்த கடையில் வேலை செய்யும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் குறிப்பிடுகையில், "அங்கே மூன்று வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். நாங்கள் எல்லாம் பதுங்கிக்கொண்டோம். நாங்கள் மூன்று நான்கு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டோம். சரத் பின்புறத்தில் சுடப்பட்டு கிடந்தார். துப்பாக்கியால் சுட்டவன் தப்பித்துவிட்டிருந்தான். பிறகு நாங்கள் 911 அவசர உதவிக்கு அழைத்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர் கொலை நடந்த ரெஸ்டாரண்ட்டில் பதிவான வீடியோவை, அமெரிக்காவின் கன்சாஸ் மாநகர காவல் துறை வெளியிட்டு குற்றவாளியைப் பிடிக்க உதவி செய்யும்படி கோரியுள்ளது. மாணவர் சரத் கோப்புவை சுட்ட அந்த துப்பாக்கி மனிதன், வீடியோவில் பிரவுன் மற்றும் வெள்ளை குறுக்கு கோடு போட்ட டிசர் அணிந்து காணப்படுகிறார்.
கான்ஸாஸ் மாநகர காவல் துறை வீடியோவை வெளியிட்டு குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்பவர்களுக்கு 10,000 டாலர் பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளதோடு குற்றவாளியைப் பற்றி விவரம் தெரிந்தால் தகவல் அளிக்க போன் நம்பரையும் அறிவித்துள்ளது.